AR Rahman: AR ரஹ்மான் இசை நிகழ்ச்சி “உச்சக்கட்ட பகல் கொள்ளை..” விளாசித் தள்ளும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள், பெரும் சர்ச்சையாகியுள்ளன. இதனையடுத்து நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு, டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தில் 21000 ரசிகர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி, உச்சக்கட்ட பகல் கொள்ளை என சாடியுள்ளார்.

உச்சக்கட்ட பகல் கொள்ளை: ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், இப்போது சர்வதேச அளவில் பிரபலமாக காணப்படுகிறார். கோல்டன் குளோப், கிராமி, ஆஸ்கர் என இவர் வாங்காத விருதுகளே இல்லை எனலாம். அதேபோல், கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏஆர் ரஹ்மான் செய்த இசை சாதனைகள் ரொம்பவே அதிகம். இசை தவிர்த்து பழகுவதிலும் மற்றவர்களை மதிப்பதிலும் ரொம்பவே தனித்துவமானவராக விளங்கினார்.
ஒட்டுமொத்தமாக ஏஆர் ரஹ்மானைப் போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது என ரசிகர்களே புகழ் பாடியுள்ளனர். ஆனால், சென்னை ஈசிஆரில் ஏஆர் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி, அவரது கேரியரில் மிக மோசமான அனுபவமாக அமைந்துவிட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாததால், ரசிகர்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரக்தியோடு வெளியேறினர்.
அதேபோல், மைதானத்திற்கு உள்ளே சென்றவர்களுக்கும் உட்கார எந்தவிதமான இருக்கை வசதிகளும் இல்லை என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் பார்க்கிங் வசதி இல்லாததால், ஈசிஆர் பகுதி முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளால் நொந்துபோன ரசிகர்கள், ஏஆர் ரஹ்மானை கடுமையாக வசைபாடிச் சென்றனர். மேலும் இந்த இசை நிகழ்ச்சியை ஏஆர் ரஹ்மான் நடத்தியிருக்கவே கூடாது எனவும் ஆதங்கப்பட்டனர்.
பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டதால், சிலர் கோபத்தில் டிக்கெட்டுகளை அங்கேயே கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நிகழ்ச்சியில் 25000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கே 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு, டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என ஏஆர் ரஹ்மானும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ACTC நிறுவனமும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று 4000 பேருக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டதாக ACTC நிறுவனம் அறிவித்தது. ஆனால், கூடுதலாக 21000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் கேள்வி மேல் கேள்விக் கேட்டு விமர்சனமும் செய்து வந்தார். இப்போது டிக்கெட் கட்டணம் திருப்பிக் கொடுத்துவருவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். "4,000 பேருக்கு பணத்தை திருப்பி தரப்போறோம்னு சொன்னீங்களே. ஆனா இப்ப மொத்தம் 21,000 பேரை ஏமாத்தி இருக்கீங்களாம். உச்சக்கட்ட பகல் கொள்ளைடா" என மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவீட்டர் பதிவுக்கு, ரசிகர்களும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்த சர்ச்சைகளுக்கு இன்னும் தீவிரமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











