என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜா ரகுமான், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்வேன், நாளைக்கு எனக்கு என்ன தோன்றுமோ அதை செய்வேன். இதனால், உடன் இருப்பவர்கள் என்னை கிழவி மாதிரி நடந்து கொள்கிறாய் என்றெல்லாம் கேட்பார்கள் என பேசி உள்ளார்.
தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர், மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் தொடங்கிய இவரது பயணம், காலங்கள் கடந்தும் பல்வேறு மாபெரும் ஹிட் பாடல்களை கொடுத்து மவுசு குறையாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

ஏ.ஆர்.ரகுமானைப்போல அவரது வாரிசுகளும் இசையின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன், பாடகராக கலக்கி வருகிறார். சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்கி உள்ள அமீன், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் சில பாடல்களை பாடி இருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமானும் எந்திரன் தொடங்கி பொன்னியின் செல்வன் 2 வரை பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் பாடி இருக்கிறார்.
ஏ ஆர் ரஹ்மானின் மூத்த மகள்: இவர் கடந்தாண்டு, ரியாசுதீன் ஷேக் என்கிற சவுண்ட் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். தற்போது,யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர், என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் பொழுது, நாங்கள் நிச்சயமாக அதற்காக உழைக்கிறோம் என்பது, ஒரு பக்கம் இருந்தாலும், நான் எனக்கு மிகவும் உண்மையாக இருக்கிறேன் என்பது தான் மிக முக்கியமான விஷயம். நான் முதலில் எனக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் பொய்யாக வாழ விரும்பவில்லை.
குடும்பம் தான் என் பலம்: வாழ்க்கை என்பது மிக மிக குறுகியது, நான் என்னுடைய வாழ்க்கையில் இந்த விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருந்தியதே கிடையாது. என்னுடைய சகோதரி என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கிறாள், என்னுடைய அப்பா,தம்பி என்னுடைய கணவர் ஆகிய மூன்று பேரும் முக்கியமானவர்கள். அவர்கள் எப்போதும் எனக்காக இருப்பார்கள்.
கிழிவி மாதிரி: நான் சில விஷயங்களை காரசாரமாக பேசும் பொழுது, இந்த வயதில் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று சுற்றி இருந்தவர்கள் யோசிப்பார்கள். கல்லூரி சென்றால், என்னுடைய நடை,உடை பாவனை எல்லாம் மாறிவிடும் என்று சொன்னார்கள். ஆனால், இன்று எனக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்கிறேன் நாளைக்கு எனக்கு என்ன தோன்றுமோ அதை செய்வேன். இதனால், உடன் இருப்பவர்கள் என்ன கிழவி மாதிரி பேசுறா, கிழிவி மாதிரி நடந்துக்கிற என்றெல்லாம் சொல்லுவார்கள். நான் மற்றவர்களை அப்படி இருங்கள், இப்படி இருங்கள் என்று சொல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் ஏன், நான் செய்வதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்று அந்த பேட்டியில் கதீஜா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











