மணிரத்னத்தை சம்மதிக்க வைக்க ஏஆர் ரஹ்மான் பட்டபாடு: பொன்னியின் செல்வன் பாடல்கள் உருவான கதை
சென்னை: கோலிவுட்டின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோலிவுட்டின் சூப்பர் கூட்டணி
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி வெளியாகிறது. மணிரத்னம் இயக்கிய படங்களுக்கு, ஆரம்பத்தில் இளையராஜா தான் இசையமைத்து வந்தார். ஆனால், ரோஜா படத்தில் இருந்து மணிரத்னம் - இளையராஜா கூட்டணி பிரிந்து, மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் என புதிய காம்போ உருவானது. அன்றிலிருந்து தற்போது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் வரை இந்தக் கூட்டணி மாஸ் காட்டி வருகிறது.

பொன்னியின் செல்வன் பாடல்கள்
பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ஏற்கனவே 'பொன்னி நதி', 'சோழா சோழா' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் நேற்று வெளியானது. பொன்னியின் செல்வன் ட்ரெய்லருடன் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பேசிய ஏஆர் ரஹ்மான், பொன்னியின் செல்வன் பாடல்கள் உருவானது குறித்து மனம் திறந்து பேசினார்.

மணிரத்னம் ஓக்கே சொல்ல ஒருமாதம்
பொன்னியின் செல்வன் ஷூட்டிங் தொடங்கப்பட்டதுமே, மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் இந்தப் படத்தின் இசைக்காக இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று பல தகவல்களை சேகரித்தனர். இதனை இயக்குநர் மணிரத்னம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல்களை ஓக்கே சொல்ல, இயக்குநர் மணிரத்னம் ஒருமாதம் எடுத்துக்கொண்டதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பார்த்து பார்த்து இசை வடிவம் கொடுத்தோம்
இதுகுறித்து ஏஆர் ரஹ்மான் பேசியபோது, "இந்த படத்துக்காக தோடி உள்பட எத்தனையோ ராகத்தில் பாடலும், பின்னணி இசையும் அமைத்து மணிரத்னத்திடம் போட்டுக் காட்டினேன். ஆனால், அவர் அதை ஏற்கவே இல்லை. சில விஷயங்களை தமிழ், தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து அதன் பின்னணியில் கற்பனை செய்து இசையமைத்தேன். மேலும், இடையிடையே சின்னச் சின்னதாக அரபிக் டச் கொடுத்து இசையமைத்தேன். மணிரத்னத்திடம் போட்டு காட்டினேன். அவர் ஒரு மாதம் கழித்து தான் ஓக்கே சொன்னார். அப்படி இந்தப் படத்துக்கு பார்த்துப் பார்த்து இசைவடிவம் கொடுத்துள்ளோம்" எனக் கூறினார். இந்நிலையில், நேற்று வெளியான பொன்னியின் செல்வன் பாடல்கள் டிரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











