Cannes 2022: நயன்தாரா, பூஜா ஹெக்டே, மாதவன், ஏ.ஆர். ரஹ்மானுக்கு தயாராகும் சிகப்பு கம்பள வரவேற்பு!
சென்னை: பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்படவுள்ள கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா துறையை இந்த ஆண்டு கெளரவிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்திய அரசு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், 75வது ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய சினிமா துறைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் காத்துக் கொண்டிருக்கிறது.
நடிகர் மாதவன், ஏ.ஆர். ரஹ்மான், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தீபிகா படுகோன் மற்றும் அக்ஷய் குமார் உள்ளிட்ட இந்திய நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கான்ஸ் 75
சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவின் 75வது ஆண்டு விழா வரும் மே 17 முதல் மே 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டைச் சேர்ந்த சினிமா உலகத்தை சிறப்பிக்கும் முயற்சியை கான்ஸ் திரைப்பட விழாவை நடத்துபவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், முதல் நாடாக அந்த கெளரவத்தை இந்திய சினிமா துறை பெற்றுள்ளது.

மாதவன் படம் ரிலீஸ்
இந்த கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்டரி திரைப்படம் திரையிடப் பட உள்ளது. ராக்கெட்டரி படத்தின் உலக ப்ரீமியர் ரிலீஸே கான்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் நடிகர் மாதவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் முதல் நயன்தாரா வரை
இந்நிலையில், வரும் மே 17ம் தேதி ஆரம்பமாகவுள்ள கான்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா, பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நவாசுதின் சித்திக், மாதவன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இந்திய சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

நடுவராக தீபிகா படுகோன்
சர்வதேச திரைப்பட விழாவின் நடுவராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கே வெளியிடப்படும் படங்களை பார்த்து அதை தேர்வு செய்யும் ஜூரி குழுவில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோன், அதற்காக தற்போதே பிரான்ஸ் நாட்டிற்கு விமானம் மூலம் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இல்லாத அளவில் தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகளவில் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











