ட்யூன் அமைத்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அழுதது எந்தப் பாடலுக்கு தெரியுமா?.. அவ்வளவு உருகிருக்காரே ப்பா
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் வரை புகழடைந்தவராக இருக்கிறார். ஏகப்பட்ட விருதுகளை அள்ளியிருக்கும் அவர் தமிழில் தொடர்ந்து பிஸியாக இசையமைத்துவருகிறார். கடைசியாக அவர் காதலிக்க நேரமில்லை, தக் லைஃப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் தான் இசையமைத்த பாடல்களிலேயே ட்யூன் போட்டதும் அழுத பாடல் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக கோலோச்சிவருகிறார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற அவர் தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கிருந்து ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைக்க ஆர்மபித்த அவர்; ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். மேலும் கிராமி, கோல்டன் க்ளோப் விருதுகளையும் வென்றிருக்கிறார்.
பிஸியான ஏ.ஆர்.ரஹ்மான்: கடல் கடந்து சென்று இசையமைத்தாலும் வேரினை அவர் எப்போதுமே மறந்தது இல்லை. அதனால்தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் இப்போதும் தமிழ் சினிமாக்களுக்கு தொடர்ந்து இசையமைத்துவருகிறார். இத்தனை சாதனைகளை செய்துவிட்டோம் என்று அசால்ட்டாக இல்லாமல் இப்போதும் முதல் படத்துக்கு இசையமைப்பது மாதிரியே இசையமைத்து வருவது அவரது அதிசய குணங்களில் ஒன்று.

மூன் வாக் ரஹ்மான்: கடைசியாக அவர் தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அப்படங்கள் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் வழக்கம்போல் ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும் பட்டையை கிளப்பின. அடுத்ததாக மூன் வாக் என்ற படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதில் இசையமைத்தது மட்டுமின்றி ஸ்க்ரீனில் தோன்றவும் செய்திருக்கிறார். முக்கியமாக முதன்முறையாக அத்தனை பாடல்களையும் அவர் பாடியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அவர் கொடுத்த அந்தப் பேட்டியில், "வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் பல உணர்வுகளை சொல்ல வேண்டியது இருந்தது. அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. அப்பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் அந்த்ப் பாடலுக்கான ட்யூன் எனக்கு சிக்கியது.
அழுதுவிட்டேன்: அந்த ட்யூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் எதிர்பார்த்த ட்யூன் என்றும் உணர்ந்தேன். அந்தப் பாடலில் டஃப் என்ற இசைக்கருவியை பயன்படுத்தியிருந்தோம். அது பழங்காலத்து கருவி. பெரிதாக யாரும் அதை பயன்படுத்தவில்லை. எனவே அந்தப் பாடலில் அதனை நாங்கள் அதிகமாக பயன்படுத்தினோம்" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இப்படி ட்யூன் போட்டால் யாருக்குத்தான் அழுகை வராது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











