Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இசைப்புயலின் உணர்ச்சிகரமான படைப்பு - 'ஒன் ஹார்ட்!
சென்னை : திரைப்பட இசை, ஆல்பங்கள், உலக இசைப் பயணம், விருதுகள் என்று தொடர்ச்சியாக பல உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மைக்கேல் ஜாக்சனின் 'திஸ் இஸ் இட்' கான்சர்ட் சினிமா பாணியில் 'ஒன் ஹார்ட்' என்ற இசைத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்க நகரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய கான்சர்ட்டுகள் தொகுக்கப்பட்டு 'ஒன் ஹார்ட்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சினிமாவுக்கான திரைக்கதையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது இந்த ரியல் ஹாலிவுட் பாணியிலான சினிமா.
ஹாலிவுட்டில் இந்த பாணியில் பல படங்கள் வெளிவந்திருந்தாலும் இந்தியாவில் வெளியாக இருக்கும் முதல்படம் இதுதான். மலேசியாவில் இன்று வெளியாகும் இந்தப் படம் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான் படம் என்பதால் அதனை ஆடிப்பாடி கொண்டாடத்துடன் பார்ப்பதற்காக வெளியாகும் அன்று 20 ஆயிரம் ரசிகர்கள் பார்க்கும் வகையில் திறந்த வெளி திரையரங்கிலும் திரையிடப்படுகிறது.
இந்தப் படம் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துகொண்டவை இங்கே...
இயக்குநர் அவதாரம் எடுக்கக் காரணம் :
'சினிமா துறைக்குள் நிலவும் அதிகாரம்தான், இயக்குநர் ஆகும் எண்ணத்தை உண்டாக்கியது. இங்கு கதாநாயகனுக்குதான், கதாநாயகி, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற வரிசையில் இசையமைப்பாளருக்கு 5 அல்லது 6-வது இடம்தான் கொடுக்கப்படுகிறது. புதிதாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்தில் கதை, திரைக்கதைக்குள் ஆர்வம் காட்டினால், இவர் எதற்காக இதில் தலையிடுகிறார் என்பார்கள். அதனால், நான் சொல்ல நினைக்கும் பாணியில் திரைக்கதை அமைத்து எடுக்க முடிவெடுத்தேன்.
கதைகள் தோன்றிய தருணம் :
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் விதவிதமான வாழ்க்கை முறை, புதிய கதை இருக்கிறது. அதையெல்லாம் ஏன் படமாக எடுக்கக்கூடாது எனத் தோன்றியது. என் முதல் கதை உருவானது 16 மணிநேர விமானப் பயணத்தின்போது. மேகங்கள் நடுவே மிதந்தபடி என்ன செய்வதெனத் தெரியாமல் யோசித்தபோது மனதில் உதித்த கதைதான் ‘99 சாங்ஸ்'. தொடர்ந்து ‘இன்ஃபினிட் லவ்', ‘லீ மஸ்க்' என இசைக் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.
இசைத் திரைப்படம் எடுக்கும் முடிவு :
ஹாலிவுட்டில் இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைப் படமாக எடுத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்', கான்சர்ட் திரைப்பட வகையில் உலகப்புகழ் பெற்றது. இந்தியாவில் முதல்முறையாக இந்த வகை சினிமாவை வெளியிடுகிறோம். இதில் என் இசை அனுபவங்கள், வாழ்க்கை குறித்த என் தத்துவார்த்தப் புரிதல், ஹரிசரண், ஜோனிதா காந்தி, ரஞ்சித் பாரட், கேபா, ஆண்ட், சிராஜ், மோஹினி, கார்த்திக் தேவராஜ், ஆன் மேரி உள்ளிட்ட இசைக் குழுவினருடனான அனுபவப் பகிர்வு எனப் பலவற்றை ஒரு கதையோட்டத்துடன் ஆத்மார்த்த சினிமாவாக ‘ஒன் ஹார்ட்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளோம்.
'ஒன் ஹார்ட்' டைட்டில் :
'ஒன் ஹார்ட்' என் அறக்கட்டளையின் பெயர். இப்படத்தின் வசூல் அந்த அறக்கட்டளைக்குச் சென்றடையும். இங்கு வறுமையில் வாடும் இசைக் கலைஞர்களுக்கு, வளமான கலைஞர்கள் உதவ முன்வரவேண்டும். அதற்கான பணியை ‘ஒன் ஹார்ட்' அறக்கட்டளை முன்னெடுக்கும்.
இசைக்கலைஞர்களின் எதிர்காலம் :
பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேராமல் இசைக் கலைஞராக மாறியபோது, எதிர்காலத்தை நினைத்து சுமார் 10 ஆண்டுகள் வரை ரொம்ப பயந்தேன். பலருக்கு கிடார் வாசிப்பேன் எனச் சொன்னால் திருமணத்திற்குப் பெண்ணும் கிடைப்பதில்லை. அவர்களின் எதிர்காலம் சோதனைக்குரியதாகவே இருக்கிறது.
உணர்ச்சிமயமான ரசிகர்கள் :
தமிழ், ஆங்கிலம், இந்தியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட 16 கச்சேரிகளிலும் ‘சின்ன சின்ன ஆசை', ‘முன்பே வா' உள்ளிட்ட பல தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. அவற்றையும் இதில் பார்க்கலாம். படத்தைப் பார்ப்பவர்கள் இசைக் கலைஞர்களின் உலகத்துக்குள்ளேயே வந்துவிடுவார்கள். படம் பார்த்தவர்கள், ‘ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை' எனப் பாராட்டினார்கள். இசை வழியாகச் சொல்லப்படும் படம் என்பதால், உணர்ச்சிப் பெருக்கில் பலர் அழுதுவிட்டார்கள்.' என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
இசைப்புயலின் கச்சேரியை நாமும் பார்க்கக் காத்திருப்போம்!