சென்னையில் ஏஆர் ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி... அதுவும் யாருக்காகன்னு தெரியுமா..?
சென்னை: உலக அரங்கில் இந்திய திரையுலகின் அடையாளமாக பார்க்கப்படும் ஏஆர் ரஹ்மான், தொடர்ந்து பிஸியாகவே காணப்படுகிறார்.
பத்து தல, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், லால் சலாம், KH 234 என பல படங்கள் ஏஆர் ரஹ்மான் கைவசம் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை என்ற ரசிகரின் கேள்விக்கு மிகவும் வேதனையுடன் பதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து தற்போது சென்னையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளாக அதே பரபரப்பு
1992ல் ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், அன்று முதல் 30 ஆண்டுகளாக இசைப் புயலாக சுழன்றடித்து வருகிறது. தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை கைகளில் ஏந்திவிட்ட ஏஆர் ரஹ்மான், இப்போதும் இந்தியளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்தாண்டு அத்ரங்கி ரே, இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்தாண்டும் பத்து தல, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், மாமன்னன், லால் சலாம் போன்ற படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

சென்னையில் இசை நிகழ்ச்சி
இதனிடையே உலகம் முழுவதும் அடிக்கடி இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் ஏஆர் ரஹ்மான். சமீபத்தில் மலேசியாவில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து மார்ச் 7ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அவரது மியூசிக் கான்சர்ட் நடக்கவுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஏஆர் ரஹ்மானிடம், "சார், சென்னை என்றொரு நகரம் இருக்கிறது நினைவிருக்கிறதா?" என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதாவது சென்னையில் எப்போது இசை நிகழ்ச்சி என அந்த ரசிகர் ரஹ்மானிடம் கேட்பதாக இருந்தது.

6 மாதங்கள் வெயிட்டிங்
அந்த ரசிகருக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான், சென்னையில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்க 6 மாதங்கள் ஆகிறது என குறிப்பிட்டிருந்தார். ஏஆர் ரஹ்மானின் இந்தப் பதிவு ரசிகர்களிடம் வைரலானதோடு, பலரது கவனத்துக்கும் சென்றது. சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவதில் ஏஆர் ரஹ்மானுக்கே இவ்வளவு பிரச்சினைகளா என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தற்போது பஞ்சாயத்து எல்லாம் முடிந்து ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி
அதன்படி மார்ச் 19ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கியமாக இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, திரைப்பட படப்பிடிப்புகளின் போது உயிரிழந்த லைட் மேன்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications