Bharathiraja: எல்லாவற்றிக்கும் நன்றிகள்.. இளைப்பாருங்கள் பாரதிராஜா.. உருக்கமாக வழி அனுப்பிய AR ரகுமான்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருடன் நெருக்கமாக பழகிய பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், பாரதிராஜா குறித்து மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், " தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்து கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே " என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாரதிராஜாவுடன் இணைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மொத்தம் ஐந்து படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.ஆர். ரகுமானால் கிராமத்து கதைக்களத்திற்கும் இசையமைக்க முடியும் என்று திரையுலகத்திற்கு நிருவிய படங்கள் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படங்கள் தான் முக்கிய காரணம். இவர்கள் இருவரும் இணைந்து, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, அந்திமந்தாரை, தாஜ்மஹால் மற்றும் கண்களால் கைது செய் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

ராஜமௌலி: அதேபோல் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில்," சினிமா என்றாலே ஸ்டுடியோவுக்குள் தான் என்றிருந்த நிலையை மாற்றி, கேமராவை கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற உண்மையான புரட்சியாளர் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள். சமரசமில்லாத அவரது யதார்த்தமான கதைகளும், அஞ்சாத திரைப்பார்வையும், அவர் திரையில் விதைத்த அசலான வாழ்வியலும் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவரது அசாதாரணமான படைப்புகளையும், அவர் விட்டுச் சென்ற பிரம்மாண்டமான கலைப் பாரம்பரியத்தையும் நேரில் கண்டு கொண்டாடுவதை நாம் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன்: அதேபோல் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில், " பாரதிராஜா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். இந்தியத் திரையுலகில் தனது தனித்துவமான பார்வை, அசாத்தியமான கதைசொல்லல் மற்றும் அளப்பரிய பங்களிப்பின் மூலம் காலத்தால் அழியாத முத்திரையைப் பதித்த மாபெரும் சாதனையாளர் அவர். அவர் விட்டுச் சென்ற கலைப் பாரம்பரியம், இனிவரும் தலைமுறைத் திரைப்பட இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்கும் என்றும் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் விளங்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி " என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications