6 மாதங்களாக பெர்மிஷன் ப்ராசஸ் நடக்குது.. அரசு மீது ஏ.ஆர். ரஹ்மான் அதிருப்தி?
சென்னை: சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சியை நடத்துவதில்லை என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்திருக்கும் பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.

இரண்டு ஆஸ்கர்களை அள்ளிவந்த தமிழன்
பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே க்ளோடன் க்ளோப் விருதையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியும் தற்போதைய தமிழ் படங்கள்
சமீபத்தில்கூட பொன்னியின் செல்வன் படத்தில் அவரது இசை பழைய ரஹ்மானை நினைவூட்டியதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது அவர் சிம்பு நடிக்கும் பத்து தல, உதயநிதி, வடிவேலு நடித்திருக்கும் மாமன்னன், பொன்னியின் செல்வன் 2 என வரிசையாக தமிழ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தொடர் இசை நிகழ்ச்சிகள்
திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி தொடர்ந்து வெளிநாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். அப்படி அவர் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடத்திய இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. கடந்த ஜனவரி மாதம்கூட மலேசியாவில் அவர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அதேசமயம், வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் ரஹ்மான் தமிழ்நாட்டில் ஏன் நடத்துவதில்லை என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.

ரசிகரின் கேள்விக்கு ரஹ்மானின் பதில்
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரஹ்மான், "பெர்மிஷன், பெர்மிஷன், பெர்மிஷன் 6 மாத ப்ராசஸ்" என பதிலளித்திருக்கிறார்.

அதிருப்தியை வெளிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்?
ரஹ்மானின் இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க 6 மாதங்கள் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பும் பலர்; இதன் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சிக்கு அனுமதி தராத அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் எனவும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











