AR Rahman Top 10 Songs: AR ரஹ்மானின் ஆல் டைம் பெஸ்ட் 10 சாங்ஸ்... இதுதானா அந்த லிஸ்ட்!
சென்னை: முதல் படத்திலேயே இளையராஜாவுடன் மோதி தேசிய விருது வென்று அசத்தியவர் ஏஆர் ரஹ்மான். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், இதுவரை பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1992ல் தொடங்கிய ஏஆர் ரஹ்மானின் இசை பயணம், 30 ஆண்டுகளை கடந்தும் சாதனை படைத்து வருகிறது. இன்று அவரது 57வது பிறந்தநாளை முன்னிட்டு ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான சிறந்த 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

ஏஆர் ரஹ்மானின் ஆல்-டைம் பெஸ்ட் 10 சாங்ஸ்: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் சிறந்த 10 பாடல்களில் சந்தேகமே இல்லாமல் முதல் இடம் பிடிப்பது ரோஜா படத்தில் இடம்பெற்ற 'புது வெள்ளை மழை' தான். காஷ்மீரின் பனிப் பொழிவை முதன்முதலாக இசையில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ஏஆர் ரஹ்மான். முதல் பிஜிஎம் முதல் பாடலின் இறுதிவரை காஷ்மீரில் மிதக்க வைத்தது இந்தப் பாடல் தான்.
இந்த வரிசையில் டூயட் படத்தில் இடம்பெற்ற 'அஞ்சலி அஞ்சலி' பாடலுக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. இந்தப் பாடலில் எஸ்பிபி, சித்ரா குரல்களை தனது மெல்லிசையால் மீட்டெடுத்தார் ஏஆர் ரஹ்மான். முக்கியமாக மறைந்த கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசையும் கேட்பவர்களை மயங்க வைத்தது. முதன்முறையாக ஏஆர் ரஹ்மானுடன் கூட்டணி வைத்த கே பாலச்சந்தருக்கு 'டூயட்' படத்தின் பாடல்கள் ஆல்டைம் ஃபேவரைட்டில் இடம் பிடித்தது.
அதேபோல், கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற 'போறாளே பொன்னுத்தாயி' பாடல் ஏஆர் ரஹ்மானின் இன்னொரு கிளாஸிக் எனலாம். சென்னை போன்ற சிட்டியில் வளர்ந்த பையனுக்கு கிராமத்து இசையெல்லாம் சரிபட்டு வருமா என ஒரு பேச்சு இருந்தது. அதனை கிழக்குச் சீமையிலே படத்திலேயே தகர்த்துவிட்டார் ஏஆர் ரஹ்மான். அதன்பின்னர் கருத்தம்மாவில் மீண்டும் பாரதிராஜா கூட்டணியில் அசரடித்தார். மறைந்த ஸ்வர்ணலதா குரலில் போறாளே பொன்னுத்தாயி சோகப் பாடல் எப்போதும் டாப் லிஸ்ட்டில் இருக்கும்.
ஏஆர் ரஹ்மானின் தனிச் சிறப்புகளில் ஒன்று கஸல் இசை. அப்படி பாம்பாய் படத்தில் அவர் கொடுத்த இசை விருந்து தான் "கண்ணாலனே" பாடல். காதலில் திளைத்திருக்கும் இளம்பெண்களின் தாபங்களை தனது குரலில் வார்த்தெடுத்தார் சித்ரா. இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மானின் கஸல் சங்கதிகள் கேட்பவர்களை தலையாட்டி ரசிக்க வைத்தது. அனைத்து மொழிகளிலும் இந்தப் பாடல் அதி உச்சம் தொட்டது.
முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஏஆர் ரஹ்மான் கூட்டணி வைத்த திரைப்படம் முத்து. ரஜினி, ஏஆர் ரஹ்மான், கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியின் முதல் சங்கமும் இந்தப் படம் தான். அதுவரை ரஜினியின் என்ட்ரி சாங் துள்ளலாக குத்தாட்டம் போட வைக்கும். அந்த மரபுகளை உடைத்தெறிந்து 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலை கம்போஸ் செய்திருந்தார் ஏஆர் ரஹ்மான். அந்த முதல் பிஜிஎம் மட்டுமே போதும் ஆயுசுக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்கும்.
அதேபோல், ஏஆர் ரஹ்மானின் ஃபியூஸன் இசைக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வெஸ்டர்ன், ஃபோல்க், கிளாஸிக் என ஏதேனும் இரண்டு ஸ்டைல்களை எடுத்துக்கொண்டு, அவைகளை ஒரே ரிதம்மில் விருந்து படைப்பதில் தனித்துவமானவர். அப்படி ரசிகர்களை கிறங்கடித்த பாடல் என்றால், அது ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற 'ஹைர ஹைர ஹைரப்பா' தான். இந்தப் பாடலில் வெஸ்டர்னையும் கஸல் இசையையும் ஒரு கூட்டுக் கிளியாக சிறகடித்து ரசிகர்களை ஆட வைத்திருப்பார் ஏஆர் ரஹ்மான்.
இந்த வரிசையில் மணிரத்னம் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான 'உயிரே' படத்தின் பாடல் இடம்பெறவில்லை என்றால் அது தெய்வ குத்தமாகிவிடும். இப்படத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஓராயிரம் வெரைட்டி காட்டியிருப்பார். ஒட்டுமொத்தமாகவே உயிரே ஆல்பம் ரசிகர்களின் ஃபேவரைட் என்றாலும், இதில் இடம்பெற்ற 'தைய்யா தைய்யா' பாடலில் ஏஆர் ரஹ்மான் புகுத்திய மாயம் என்னவென்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
ஏஆர் ரஹ்மானின் இசையில் ஷங்கரின் பட பாடல்கள் எப்போதுமே சூப்பர் ஹிட் அடித்துவிடும். ஒருவகையில் சொல்ல வேண்டுமானால், ஷங்கரின் ஆரம்ப கால வளர்ச்சியில் ஏஆர் ரஹ்மானுக்கு தான் அதிக பங்குள்ளது. அந்த வகையில் முதல்வன் படத்தில் இடம்பெற்ற 'குறுக்கு சிறுத்தவளே' பாடல் அதி அற்புதமான மெலடிகளில் ஒன்று. ஹரிஹரன், மஹாலக்ஷ்மி ஐயரின் தேன் சொட்டும் குரல்களில் ரசிகர்களை இப்போதும் கிறங்கடிக்கும் இந்த குறுக்கு சிறுத்தவளே பாடல்.
அதேபோல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற 'என்ன சொல்ல போகிறாய்' பாடல் அட்டகாசமான மெலடியாகும். அஜித்தின் கேரியரில் இப்படியொரு மெலடி இனி அமையாது என அவரது ரசிகர்களே பித்துப் பிடித்து நின்றனர். முக்கியமாக இப்பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் சங்கர் மகாதேவன்.
இதில் இன்னும் நிறைய பாடல்களை சொல்லலாம் என்றாலும், சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற 'முன்பே வா அன்பே வா' ஏஆர் ரஹ்மானின் ஆல்டைம் மெலடியில் இருக்கும். வாலியின் வரிகளில் காதலர்களின் தேசிய கீதமாக ஒலித்தது முன்பே வா அன்பே வா. சூர்யா, ஜோதிகாவின் திருமணத்திற்கு முன்பு இந்தப் படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











