மோசமான கதை வெச்சிருக்கவன் தான் முதலிடத்தில் இருக்கான்.. லோகேஷ் கனகராஜை விமர்சித்த கோபி நயினார்?
சென்னை: Gopi Nainar (கோபி நயினார்) அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் வார இதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அறம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். நயன்தாரா நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக நடிகையை மையமாக வைத்து படம் எடுத்தும் பெரிய ஹிட்டை கொடுக்கலாம் என்ற டெம்ப்ளேட்டை கோபி நயினார் உருவாக்கினார். அந்தப் படத்திலிருந்து நயன் மீதான மதிப்பு ரசிகர்களிடம் அதிகளவு உயர்ந்தது.

கத்தி கதை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. விஜய்யின் கரியரிலும், ஏ.ஆர்.முருகதாஸின் கரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அந்தப் படம் அமைந்து மெகா ஹிட் ஆனது. ஆனால் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று பெரிய சட்டப்போராட்டமே கோபி நயினார் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பர் நகரம்: இந்த சூழலில் அறம் படத்துக்கு பிறகு அவர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. கோபி நயினார் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இதில் வடசென்னையின் அசல் முகங்களையும் , வாழ்வாதாரத்தையும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.
பேட்டி: இந்நிலையில் கோபி நயினார் தனியார் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “இப்போதெல்லாம் நடிகர்களை வைத்துதான் கதை சொல்கிறார்கள். யாரை வளர விட வேண்டும், யார் வளரக்கூடாது என்பதையும் அந்த நடிகர்கள்தான் முடிவு செய்கிறார்கள். நல்ல கதை சொல்கிறவர் நூறாவது இடத்திலும், மோசமான கதையை வெச்சிருக்கவன் முதலிடத்திலும் இருக்கான்.
சீர் கெட்ட சினிமா: ஒரு மோசமான ஹீரோ யாரை இயக்குநராக்க வேண்டும் யாருடைய கதை சினிமாவாக எடுக்கப்பட வேண்டும் அதை யார் தயாரிக்க வேண்டும் என்கிற வரைக்கும் முடிவு செய்கிறான். சினிமா எப்படி சீர்கெட்டு போயிருக்கு பாருங்க” என்று கொந்தளித்துவிட்டார்.
இந்தப் பேட்டியை பார்த்த பலரும் தற்போது தமிழ் சினிமா இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ்தான் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு விஜய் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிவருகிறார். அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த மோசமான கதை வைத்திருக்கும் இயக்குநர் என்று லோகேஷ் கனகராஜையும், மோசமான ஹீரோ என்று விஜய்யையும் கோபி நயினார் சொல்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
அதேபோல், கோபி நயினார் லோகேஷ் கனகராஜை சொன்னாலும் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் அவர் மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களை மட்டும்தான் நன்றாக கதைப்படி இயக்கினார். அடுத்து அவர் இயக்கிய எந்தப் படத்திலும் நல்ல கதை இல்லை என்று மற்றொரு தரப்பினர் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











