மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் ரிலீஸ் தேதி இந்த மாதத்தில் இருந்து அடுத்த மாதத்துக்கு திடீரென தள்ளிப் போயுள்ளது. சமீபத்தில், விஷால் பேசிய பேச்சு தான் காரணமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 என மூன்று பாகங்கள் இதுவரை ரிலீஸாகி உள்ளன. முதல் பாகத்தில் வினய் - ஹன்சிகா, இரண்டாம் பாகத்தில் சித்தார்த் - திரிஷா, மூன்றாம் பாகத்தில் ஆர்யா - ராஷி கன்னா என சுந்தர். சியுடன் முன்னணி நடிகர்கள் நடித்த நிலையில், 4ம் பாகத்தில் விஜய்சேதுபதி, சந்தானம், தமன்னா நடிக்கப் போவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக விஜய்சேதுபதி அறிவித்துவிட்டார். சுந்தர். சியே இந்த முறை மெயின் ஹீரோவாக ராஷி கன்னாவுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
பொங்கல் ரிலீஸ்: இந்த ஆண்டு பொங்கலுக்கு அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸாகும் என்கிற அறிவிப்புடன் ஒரு அரண்மனைக்கு இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண் செல்வது போன்ற போஸ்டரை கடந்த ஆண்டு சுந்தர் சி மற்றும் குஷ்பு வெளியிட்டு திகிலை கிளப்பினர். ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு திட்டமிட்டபடி அரண்மனை 4 வெளியாகவில்லை. அயலான், கேப்டன் மில்லர் படங்களுடன் மோத விரும்பாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா? என்கிற கேள்விகள் எழுந்தன.

விஷாலுடன் மோதல்: விஷாலை வைத்து ஆம்பள படத்தை இயக்கிய சுந்தர் சி அடுத்து விஷால், வரலட்சுமி சரத்குமார் நடித்த மதகஜ ராஜா படத்தையும் இயக்கினார். ஆனால், அந்த படம் இன்று வரை ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், இந்த முறை ஏப்ரல் 26ம் தேதி ரத்னம் vs அரண்மனை 4 படங்கள் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அதிரடியாக அரண்மனை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயுள்ளது.
தள்ளிப்போன ரிலீஸ்: அடுத்த வாரம் ஏப்ரல் 26-ஆம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் படமான அரண்மனை 4 தற்போது மே 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனை 4 படத்தின் ரிலீசை சுந்தர் சி ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளார்.
விஷால் பேச்சு தான் காரணமா?: மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் இடையூறு செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்த விஷால் தற்போது என்ன காரணத்திற்காக அது பற்றி பேசினார் என சினிமா வட்டாரத்தில் அலசிய பிரபலங்கள் பலரும் அரண்மனை 4 படம் விஷாலின் ரத்னம் படத்துக்கு எதிராக ரிலீசாக போவதால் அரண்மனை 4 படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்றும் விஷால் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் கொடுக்கப்படும் என விவாதங்கள் கிளம்பிய நிலையில், தற்போது அந்த சர்ச்சைக்கு எல்லாம் இடம் அளிக்க வேண்டாம் என நினைத்த சுந்தர் சி அரண்மனை 4 படத்தின் ரிலீசை ஒரு வாரம் தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











