மகா சிவராத்திரி கொண்டாட்டம்.. ஈஷா யோகா மையத்தில் மகளுடன் அர்ச்சனா.. பரவசத்தின் உச்சத்தில் இருக்காங்க
கோவை: மகா சிவராத்திரி கொண்டாட்டமானது கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வருடா வருடம் சிறப்பாக நடைபெறும். அதில் சாமானியர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு பக்தி பரவசத்தில் திளைத்திருப்பார்கள். அந்தவகையில் இந்த வருடமும் அங்கு நடந்த கொண்டாட்டத்தில் தொகுப்பாளினி அர்ச்சனாவும் தனது மகளுடன் கலந்துகொண்டார்.
மகா சிவராத்திரியை சிவ பக்தர்கள் எப்போதும் எதிர்பார்த்திருப்பார்கள். அந்த இரவில் தூங்காமல் விழித்திருந்தால் தங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் விழித்திருப்பார்கள். நடிகர் மயில்சாமி கூட அவர் இறப்பதற்கு முன்பு சிவராத்திரி அன்று தூங்காமல் கண் விழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் சிவராத்திரி என்றாலே அன்றைய இரவு சிவ பக்தர்களுக்கு முக்கியமான ஒன்றாக மாறியிருக்கும்.
ஈஷா யோகா மையத்தில்: நாட்டில் பல்வேறு இடங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டமும், பூஜைகளும் நடந்தாலும் கோவையில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சி பெரிய கவனம் பெறும். பிரதமர் மோடி முதல் சாமானிய மனிதர் வரை பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் சிவனை வழிபடுவார்கள். மேலும் ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பக்தி பரவசத்தில் ஆட; பங்கேற்றவர்களும் அவரோடு சேர்ந்து நடனம் ஆடுவார்கள்.

இந்த வருட கொண்டாட்டம்: இந்த வருடத்துக்கான மகா சிவராத்திரி கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நடிகைகள் தமன்னா, சாரா அர்ஜுன், ரோஷினி பிரகாஷ், பிக்பாஸ் பிரபலம் அமித் பார்கவ் என பலர் கலந்துகொண்டார்கள். பக்தி பாடல்களுக்கு சத்குரு ஆட; அவரோடு சேர்ந்து இவர்களும் நடனம் ஆடியும், சிவனை வழிபட்டும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
அர்ச்சனாவும் அந்த நிகழ்ச்சியில்: இவர்கள் மட்டுமின்றி பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவும் தனது மகளுடன் கலந்துகொண்டார். அப்போது அந்த அனுபவம் குறித்து பேசிய அவர், "சிவனை நேராக பார்ப்பதற்கும்; வீட்டில் அமர்ந்து கும்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கே அமர்ந்து மக்களுக்கு மத்தியில் ஆதியோகியுடைய அந்த எனர்ஜி நமக்குள் வந்து சேர்வது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். அதை உணர்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நம் மக்கள் எவ்வளவு சிவனிடம் சென்று சேர வேண்டுமென்றாலும்; அவ்வளவு இசையும், ஆனந்தமும்தான் அவரிடம் கொண்டு சேர்க்கும்" என்றார்.
விமர்சனங்களும் உண்டு: முன்னதாக, ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு வரவேற்பு இருந்தாலும்; கடுமையான விமர்சனங்களையும் வைப்பவர்கள் உண்டு. இந்தக் கொண்டாட்டம் எல்லாம் தேவையில்லாத ஒன்று; தவறான விஷயங்கள் நடப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் அங்கே தென்படுகின்றன என பலர் சொல்லிவருகிறார்கள். ஆனாலும் ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு மவுசு குறையவே இல்லை என்பதுதான் எதார்த்தம்.


Click it and Unblock the Notifications











