வருமான வரித்துறை சம்மன்.. அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்.. விஜய் & அன்புச்செழியன் ஆடிட்டர்கள் ஆஜர்!
Recommended Video
சென்னை: வருமான வரித்துறை சம்மனை தொடர்ந்து ஏஜிஎஸ் சினிமாவின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனுக்கு அளித்த சம்மன் தொடர்பாக அவர்களது ஆடிட்டர்கள் இன்று வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜர் ஆகி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சிக்கிய அன்புச்செழியன்
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள இடங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 77 கோடி ரூபாய் ரொக்கமும், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை சோதனை முடிவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஏஜிஎஸ்சில் ரெய்டு
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களை தொடர்ந்து, பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை வேட்டை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை சென்றது.

ஷூட்டிங் பாதிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங், நெய்வேலி என்எல்சியில் நடைபெற்று வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்றதால், மாஸ்டர் படத்தின் அன்றைய ஷூட்டிங் பாதித்தது.

வருமான வரித்துறை சம்மன்
நடிகர் விஜய்யிடம் தொடர்ந்து இரு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய், அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. நடிகர் விஜய் நேரில் ஆஜராக கால அவகாசம் கோரியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

அர்ச்சனா ஆஜர்
இந்நிலையில், இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி பிகில் படத்தின் வருமானம் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வருகிறார். மேலும், நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











