நாமலாம் முதலாளிங்கய்யா..ரஜினி செய்த உதவிக்கு எதிர்ப்பு..தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் வாக்குவாதம்!
சென்னை: ரஜினிகாந்த் கொடுத்த உதவியை எப்படி வாங்கலாம் என்று தயாரிப்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Recommended Video
கொரோனா காரணமாக மற்றத் துறைகளை போல சினிமா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு பலர் உதவினர்.
நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் பணம் மற்றும் பொருளுதவி செய்தனர்.

கோரிக்கை
இந்நிலையில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ரஜினிகாந்த் நலிவடைந்த தயாரிப்பாளர் களுக்கும் உதவ வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மற்ற அமைப்புகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுத்ததை போல, தயாரிப்பாளர்களுக்கும் கொடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அவரிடம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட தொகை
இதைக் கேள்விபட்ட தயாரிப்பாளர்கள் சிலர், எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் முதலாளிகளாக இருப்பவர்கள். வெறும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை எப்படி வரிசையில் நின்று வாங்க முடியும்? ரஜினி, தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்க வேண்டும் என்றனர். இந்தப் பிரச்னை கடந்த இரண்டு நாட்களாக காரசாரமாகச் சென்று கொண்டிருந்தது.

வாக்குவாதம்
இந்நிலையில், ரஜினிகாந்த் சுமார் 750 பேருக்கு உதவும் வகையில், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இதை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வைத்து, இன்று வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தயாரிப்பாளர் பழனிவேல் உட்பட சிலர் அங்கு வந்தனர். பழனிவேல், 6.2 உட்பட சில படங்களை தயாரித்தவர். அவர் நிவாரணப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சமாதானம்
அப்போது தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி உட்பட சிலர் அவரை சமாதானப்படுத்தினர். சிறிது நேரத்தில் அவர் சென்றுவிட்டார். பின்னர், அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், 'நாம சுமார் 150 பேருக்கு முதலாளிகள். நாம் அரிசி வாங்கலாமா? கே.ராஜன், ரஜினிகாந்த் பெயரை சொல்லி அவமானப்படுத்தி விட்டார். இப்போதான் தயாரிப்பாளர் சங்கத்தில் போய் திட்டிவிட்டு வர்றேன். இந்த அரிசியை வாங்குறவங்க தயாரிப்பாளர்களே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

உதவியாக இருக்கும்
இந்நிலையில், இதுபற்றி சில தயாரிப்பாளர்களிடம் விசாரித்தபோது, 'இந்த நேரத்தில் பல நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இந்த நிவாரணம் உதவிகரமாக இருக்கும். ஈகோ காரணமாக சிலர் பிரச்னையை கிளப்புகிறார்கள். இன்று சுமார் 110 தயாரிப்பாளர்கள், இந்த நிவாரணப் பொருட்களை இன்று வாங்கிச் சென்றுள்ளனர். மீதியை நாளை வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











