'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!!
சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி!
தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி.

தமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர்.
வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற படத்தை அவர் வெளியிடும் வரையில்.
இனம் படத்தில் தமிழருக்கு எதிராக சந்தோஷ் சிவன் செய்த ஈனத்தனமான அரசியலைப் புரிந்து, அந்த கூட்டத்தை அறவே தவிர்க்க ஆரம்பித்துள்ளார் அறிவுமதி.

லிங்குசாமி இப்போது எடுத்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா ஹீரோ. பெரிய பட்ஜெட் படம். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு, இனம் படத்தை எடுத்த அதே சந்தோஷ் சிவன்தான்.
இந்தப் படத்துக்கு ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டு அறிவுமதிக்கு மெட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பியுள்ளார் லிங்குசாமி.
அதைக் கேட்கவும் விரும்பாத அறிவுமதி, மெட்டை திருப்பியனுப்பியதோடு, "லிங்குசாமி, இனம் படத்தை எடுத்த உங்களைப் போன்றவர்கள் படங்களில் பாட்டெழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம். இனம் படத்தை எடுத்த சந்தோஷ் சிவன்தானே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். அதில் நான் எப்படி பாடல் எழுத முடியும்..!" என்று திருப்பிக் கேட்டுள்ளார்.
தமிழ் தமிழ் என வாய் கிழியப் பேசும், வர்த்தக ரீதியில் பெரிய கவிஞர்களாகப் பார்க்கப்படும் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிதான் இனம் படத்துக்கு பாட்டெழுதினார். வைரமுத்து அந்தப் படத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம்.
அறிவுமதி... பெயரைப் போலவே தன்மானத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கவிஞரே.. உங்கள் பெருமையை இந்த தமிழினம் அறியட்டும்!


Click it and Unblock the Notifications











