ஆம்ஸ்ட்ராங் கொலை.. தேடப்படும் ரவுடியுடன் நெல்சன் திலீப்குமார் மனைவிக்கு தொடர்பு?.. விசாரணை ஸ்டார்ட்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்ட சூழலில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அடுத்ததாக நெல்சனிடமும் விசாரணை நடக்கவிருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னையில் குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உடைய நபராக திகழ்ந்த அவர் பெரம்பூரில் வசித்துவந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே கூலிப்படையினர் அவரை வெட்டி படுகொலை செய்தனர். அந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தின. மேலும் நடந்துவரும் திமுக ஆட்சி மீதும் பலர் கண்டனத்தை முன்வைத்தனர்.

கூலிப்படையினர் விட்ட நோட்டம்: ஆம்ஸ்ட்ராங் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தவர். ஆனால் தேர்தல் சமயத்தில் அதனை ஒப்படைத்துவிட்டார். இதனை கண்டுகொண்ட கூலிப்படையினர் பல நாட்கள் நோட்டம் விட்டு வீட்டின் அருகே கொலை செய்துவிட்டனர். இந்தக் கொலைக்கு முன் விரோதம் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு கொல்லப்பட ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக கருதி சுரேஷ் தரப்பு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது.
அடுத்தடுத்த கைது: இந்தக் கொலை வழக்கில் 23 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார்கள். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் காவல் துறையினரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். மேலும் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி ஆந்திராவில் பதுங்கியிருந்தார். அவர் தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சொந்த ஊருக்கு வந்தபோது அவரும் கைது செய்யப்பட்டார். இன்னும் ஏகப்பட்ட பேர் இந்தக் கொலை வழக்கில் தொடர்பில் இருக்கிறார்கள் என்று காவல் துறையினர் கருதுகின்றனர்.
மொட்டை கிருஷ்ணன்: இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் இன்னொரு ரவுடியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்பும், வெளிநாடு தப்பி செல்தற்கு முன்பு யார் யாருடன் பேசினார், தொடர்பில் இருந்தார் என்ற பட்டியலை காவல் துறையினர் தயாரித்தனர்.
நெல்சனின் மனைவியுடன் தொடர்பு: அந்தப் பட்டியலில் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷாவின் பெயரும் இருக்கிறது. அதாவது மோனிஷாவுடன் மொட்டை கிருஷ்ணன் தொடர்ந்து தொலைபேசியில் பேசியிருப்பதை கண்டுபிடித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணையை நடத்தினர். அப்போது ஒரு வழக்கு தொடர்பாக கிருஷ்ணனிடம் தான் பேசியதாக மோனிஷா கூறினார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடமும் அடுத்ததாக விசாரணை நடத்தவிருப்பதாகவும்; அதற்கான சம்மனை காவல் துறையினர் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நெல்சன் மற்றும் அவரது மனைவி பெயர் அடிபட்டிருப்பது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











