6 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. எந்த எந்த பாடலுக்கு தெரியுமா?
சென்னை: இசை ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் ஏகப்பட்ட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இசையால் மகிழ்வித்த பாடும் நிலா பாலு, இன்று அதே கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இழப்பால் அழவைத்துள்ளார்.
42 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பிக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தேசிய விருதுகளை பெற்று தந்த பாடல்கள் குறித்து இங்கே காண்போம்.
ஓம்கார நாதானுமே
1979ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சங்கராபரணம் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய ஓம்கார நாதானுமே சங்கராபரணம் எனும் பாடலுக்காக முதல் முறையாக தேசிய விருதை தட்டிச் சென்றார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அந்த பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருந்தார்.
தேரே மேரே பீச் மெயின்
இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தி படமான ஏக்துஜே கே லியே படத்தில் இடம்பெற்ற தேரே மேரே பீச் மெயின் பாடலை பாடியதற்காக 1981ம் ஆண்டு எஸ்.பி. பாலசுப்ரமணியம் இரண்டாவது தேசிய விருதை பெற்றார். எல்.வி. பிரசாத் தயாரிப்பில் வெளியான அந்த படத்திற்கு லக்ஷ்மிகாந்த் இசையமைத்து இருந்தார். பாலிவுட் ரசிகர்களை இன்றளவும் அந்த பாடல் ஆட்டி படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேதம் அனுவனுவனா
இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசன், ஜெயபிரதா, சரத்பாபு நடிப்பில் வெளியான சாகர சங்கமம் படத்தில் இடம்பெற்ற "வேதம் அனுவனுவனுவனா" பாடலை பாடியதற்காக மூன்றாவது முறையாக எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தேசிய விருது கிடைத்தது. மருத்துவமனையில் இருந்தபடியே கமல் கிளைமேக்ஸ் காட்சியில் நடனம் சொல்லிக் கொடுக்கும் போது இந்த பாடல் இடம்பெற்று இருக்கும்.
செப்பலாணி உண்டி
1988ம் ஆண்டு வெளியான ருத்ரவீணா படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய செப்பலாணி உண்டி பாடலுக்காக 4வது முறையாக தேசிய விருதை வென்றார். இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் சோபனா நடித்து இருந்தனர். இந்த பாடலையும் இளையராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
5வது தேசிய விருது
தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பாடியதற்காக 4 முறை தேசிய விருது வென்ற எஸ்.பி. பாலசுப்ரமணியம், 5வது முறையாக கன்னடத்தில் வெளியான சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர காவாய் படத்தில் இடம்பெற்ற "உமண்டு குமண்டு கன கர்" பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
மின்சார கனவு
1997ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி, நாசர் நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தின் தங்கத் தாமரை மகளே பாடலுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருது வென்றார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு அப்பாவாக நடித்து இருந்த நிலையில், அரவிந்த் சாமிக்காக அப்படியொரு பாடலையும் அவர் பாடி இருந்ததை இசை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என பாடியவர் ஆயிற்றே!


Click it and Unblock the Notifications











