என்னது டிமான்டி காலனி 2 படம் எடுக்கப் போறாங்களா... அப்ப அடுத்த மிரட்டல் அனுபவத்துக்கு தயாராகலாம்!
சென்னை : நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2015ல் வெளியான படம் டிமான்டி காலனி.
அனைத்து தரப்பினராலும் சிறப்பான விமர்சனத்திற்கு இந்தப் படம் உள்ளானது.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

டிமான்டி காலனி படம்
நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படத்தில் எந்தவிதமான ஹீரோ இமேஜையும் வெளிக்காட்டாமல் இயல்பாக நடித்திருப்பார் அருள்நிதி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.

சிறப்பான விமர்சனம்
விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிறப்பாக அமைந்திருந்தது. மு.க தமிழரசு படத்தை தயாரித்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை வெளியிட்டது. அஜய் ஞானமுத்துவின் அறிமுகப்படமாக டிமான்டி காலனி படம் இருந்தது. ஆனால் தன்னுடைய சிறப்பான இயக்கத்தால் அனைவரையும் அவர் கவர்ந்திருந்தார்.

அஜய் ஞானமுத்து இயக்கம்
இதையடுத்து நயன்தாராவின் இமைக்கா நொடிகள் மற்றும் விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திலும் அருள்நிதியே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டிமான்டி காலனி 2?
ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கி என்பவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் கூறிய கதை அருள்நிதிக்கு மிகவும் பிடித்ததாகவும் இதையடுத்து டிமான்டி காலனி 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாறுபட்ட கதைக்களம்
முதல் பாகத்தின் கதைக்கும், இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்துவரும் அருள்நிதிக்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











