ரம்யா டீச்சரும், நாலு போலீசும் மற்றும் நல்லா இருந்த ஊரும்...!
சென்னை: அறிமுக இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி போலீசாக நடித்துள்ள படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பேரன் அருள்நிதி, வம்சம் படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து உதயன், மௌனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார்.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் காப்பரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

டீச்சர் நாயகி...
இப்படத்தில் அருள்நிதியின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். டீச்சர் கதாபாத்திரத்தில் வருகிறார் ரம்யா நம்பீசன்.

யு சான்றிதழ்...
மேலும் சிங்கம்புலி, பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைப்பு, பட ஸ்டில்கள் பார்த்தாலே படம் நிச்சயமாக காமெடி படம் என்பது உறுதியாகிறது.இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது.

நீளமான தலைப்பு...
தங்களது முந்தைய வெற்றிப்படங்களான நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களைப் போலவே இப்படத்திற்கு நீளமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

போலீசின் சதித்திட்டம்...
தவறே நடக்காத முன்மாதிரி கிராமத்தில் சில போலீஸ்காரர்கள் வேண்டுமென்றே சில கலாட்டாக்களைச் செய்கின்றனர். அவர்களின் திட்டம் பலித்ததா என்பது தான் படத்தின் கதையாம்.

புது டிரண்ட்...
மத்தபடி இந்த படத்தில் போலீசை விமர்சித்தோ, குறை கூறியோ எந்தக் காட்சிகளும் இருக்காதாம். நிச்சயம் இது ஒரு ஜாலியான காமெடி படமாக இருக்கும் எனக் கூறும் தயாரிப்பாளர், ‘இப்படம் காமெடியில் புது டிரண்டை உருவாக்கும்' என்கிறார்.


Click it and Unblock the Notifications











