பார்ட் 2னாலே பயமா இருக்கு.. பெரிய இயக்குநர்கள் என்னை கண்டுக்க மாட்டாங்க.. அருள்நிதி ஓபன் டாக்!
சென்னை: வம்சம் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அருள்நிதி இன்னமும் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் த்ரில்லர் வகையறா படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். 14 ஆண்டுகள் சினிமாவில் நடித்து விட்ட நிலையிலும், இன்னமும் தன்னை எந்தவொரு பெரிய இயக்குநர்களும் அழைப்பதில்லை எனக் கூறியுள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமான டிமான்ட்டி காலனி படத்தில் அருள்நிதி நடித்த நிலையில், அந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர், இமைக்கா நொடிகள் படத்தை எடுத்து முன்னணி இயக்குநராக மாறிய அஜய் ஞானமுத்து சியான் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கி தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், டிமான்ட்டி காலனி 2 படத்தை இயக்கியுள்ள அருள்நிதி அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் அவர், ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
சினிமாவில் அருள்நிதி: மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனான அருள்நிதி 2010ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். உதயன், மெளன குரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணியும், டிமான்ட்டி காலனி, நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே 13, களத்தில் சந்திப்போம், டி பிளாக், தேஜாவு, டைரி, திருவின் குரல், கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

டிமான்ட்டி காலனி 2: வம்சம், மெளனகுரு, டிமான்ட்டி காலனி மற்றும் கழுவேர்த்தி மூர்க்கன் என சில படங்கள் மட்டுமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு டிமான்ட்டி காலனி 2 படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பார்ட் 2னாலே பயமா இருக்கு: சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சந்திரமுகி 2, இந்தியன் 2 என வரிசையாக பார்ட் 2 படங்கள் முதல் பாகத்தின் பெயரையே கெடுத்து வரும் நிலையில், டிமான்ட்டி காலனி 2 படம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழத்தான் செய்யும். ஆனால், இந்த படத்தை பார்த்தால் அந்த பார்ட் 2 சாபம் நீங்கி விட்டது என்பதை ரசிகர்கள் உணர்வார்கள் என அருள்நிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரிய இயக்குநர்கள் அழைப்பதில்லை: ஒரே ஜானரில் படங்களை பண்ணி வருவதால், இயக்குநர்களும் எனக்கு அதே போன்ற கதைகளையே கொண்டு வருகின்றனர். த்ரில்லர் மற்றும் கிராமப்புற கதைகள் மட்டுமே வருகின்றன. பெரிய இயக்குநர்களுக்கு நான் தேவைப்படுவதில்லை என நினைக்கிறேன். யாருமே என்னை அணுகுவதில்லை. எனக்கும் நல்ல கமர்ஷியல் படங்களையும் ஓகே ஓகே போன்ற காமெடி படங்களையும் செய்ய வேண்டும் என்கிற ஆசை உள்ளது. கூடிய சீக்கிரமே என்னுடைய படங்களின் ஜானர் மாறும் எனக் கூறியுள்ளார் அருள்நிதி.


Click it and Unblock the Notifications