2வது படத்தை சத்தமில்லாமல் எடுக்கும் அருவி இயக்குநர்: ஹீரோ வயசை மட்டும் கேட்காதீங்க
சென்னை: அருவி படம் புகழ் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் தனது அடுத்த படத்தை சத்தமில்லாமல் துவங்கி முடிக்கப் போகிறார்.
அருவி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். சிவகார்த்திகேயனின் உறவினர். முதல் படத்திலேயே சிக்சர் அடித்த அவர் தனது அடுத்த பட வேலையை சத்தமில்லாமல் துவங்கிவிட்டார்.
சுமார் ஓராண்டு காலமாக அவர் 2வது படத்தில் வேலை செய்து வருகிறார்.

பிரபு
அருண் பிரபு தனது படத்திற்கு யாழ் என்று தலைப்பு வைத்துள்ளார். படத்தின் ஹீரோ எஸ்.என். பட். அவரின் வயது வெறும் 90 தான். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியப் போகிறதாம். அந்த அளவுக்கு சத்தமில்லாமல் வேலை பார்க்கிறார் இயக்குநர்.

ஸ்க்ரிப்ட்
அருவி படத்தை எடுக்கும் முன்பே யாழ் ஸ்க்ரிப்ட்டை தயார் செய்துவிட்டாராம் அருண் பிரபு. ஆனால் அதை படமாக்க சரியான நேரத்திற்காக காத்திருந்தாராம். பாலு மகேந்திராவின் மூன்றாம் பிரை மூலம் நடிகரானவர் யாழ் பட ஹீரோ எஸ்.என். பட். அவர் மதராசபட்டினம், திருமணம் என்னும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதியவர்
பங்களாவை விட்டு வெளியே வர மறுக்கும் 90 வயது தாத்தாவின் கதையாம் யாழ். எதிர்பாராமல் ஒரு காதல் ஜோடி அந்த பங்களாவுக்குள் நுழைந்த பிறகு 90 வயது தாத்தாவின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

பட வாய்ப்புகள்
அருவி படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அதிதி பாலனை தங்களின் படங்களில் நடிக்க வைக்க முயன்றனர். ஆனால் எந்த கதையும் பிடிக்கவில்லை என்று கூறி இதுவரை நடிக்காமல் உள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











