சிவா நல்ல வெவரம்தான், ஓடுற குதிரையா பார்த்து பணம் கட்டுறாரே..3வது யார் படத்தை தயாரிக்கிறார் பாருங்க
சிவகார்த்திக்கேயன் அடுத்ததாக அருண் பிரபு இயக்கும் படத்தை தயாரிக்கிறார்.
Recommended Video
சென்னை: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தைத் தொடர்ந்து அருண்பிரபு இயக்கும் படத்தை சிவகார்த்திக்கேயன் தயாரிக்கிறார்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் எஸ்கே புரொடக்ஷன் என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வருகிறார். அவரது முதல் படமான கனா படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ, ஷெரின், ஆர்ஜே விக்னேஷ், நாஞ்சில் சம்பத், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா:
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திக்கேயன், தனது மூன்றாவது தயாரிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

3வது படம்:
இது தொடர்பாக சிவகார்த்திக்கேயன் பேசுகையில், "கனா இசை வெளியீட்டு விழாவில் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் அறிவிப்பை வெளியிட்டேன். அதுபோல் எனது 3வது தயாரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

புதுமுகங்கள் மட்டும்:
அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு தான் எனது அடுத்த படத்தின் இயக்குனர். இந்த படங்கள் முழுக்க முழுக்க புதுமுகங்கள் மட்டுமே நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

சாமர்த்தியசாலி:
சிவாவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவா நல்ல விபரம் தான், ‘தொடர்ந்து ஓடுகிற குதிரையாய் பார்த்து பணம் கட்டுகிறாரே' என அவரது சாமர்த்தியத்தை பாராட்டி வருகின்றனர். நிச்சயம் அப்படமும் வெற்றி பெறும் என இப்போதே அவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சிவாவின் தம்பி:
தனது முதல்படமான அருவி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் அருண் பிரபு. வித்தியாசமான கதைக்களம், இயக்கம் என தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். ரஜினி உட்பட பல திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றவர். அதோடு, சிவகார்த்திக்கேயனின் உறவினர் அருண் பிரபு என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











