மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
சென்னை : அருண் விஜய் மற்றும் அறிவழகன் மீண்டும் இணையும் திரில்லர் படம் ஏவி31. அப்படத்திற்காக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. குற்றம் 23 போல இப்படமும் ஒரு திரில்லிங் அனுபவத்தை தரும் படமாக இருக்கும்.
மருத்துவ குற்றம் பற்றி அக்கு அக்காக புட்டுவைத்த படம் "குற்றம் 23" இந்த படம் வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைத் தந்து வசூலிலும் சாதனை படைத்தது.

இப்படத்தின் இயக்குநர் அறிவழகனும், நாயகன் அருண் விஜயும் இப்போது மீண்டும் இணைகின்றனர். தற்காலிகமாக 'ஏவி 31' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவத்துக்காக விஜய் ராகவேந்திரா தயாரிக்கிறார். சம்பிரதாய பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

அருண் விஜய் என் நீண்டகால நண்பர் என்று கூறிய தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, அவரின் கடின உழைப்பு, பல முயற்சிகளுக்குப்பின் இப்போது அவர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விரும்பும் கதாநாயகனாக தன்னைத் தானே செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் அறிவழகனைப் பொறுத்தவரை, திரைப்படத்தில் பல புதுமைகளை புகுத்தி திரில்லர் பட வரிசையில் புதிய சிகரங்களைத் தொட முயற்சிக்கிறார். எல்லைகளைத் தாண்டிய வெற்றிகளுக்காக எப்போதும் குறிவைப்பவர் அறிவழகன். 'குற்றம் 23' படம் பல திரைக்கலைஞர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. வலுவான தனித்துவம் மிக்க கதைக்களத்துடன் திரைப்படத்தை இணைத்துக் கொள்ளும் இந்த இரட்டையர்களுடன் நான் இணைவதில் பெருமைப்படுகிறேன்.

இந்தக் கலைஞர்கள் இணைந்து நிகழ்த்தவிருக்கும் மாயாஜாலத்தை காண நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரும் திரில்லிங்கான அனுபத்தைத் தரும் படமாக இது திகழும் என்பதை மட்டும் உறுதி என்று தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறினார்.


Click it and Unblock the Notifications











