தடம், மாஃபியாவை தொடர்ந்து மீண்டும் மூன்றெழுத்து மேஜிக்!
அருண் விஜய்யின் 30வது படத்தின் டைட்டிலை நடிகர் கார்த்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தை ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்குகிறார்.
சென்னை: தடம், மாஃபியா படங்களை தொடர்ந்து அருண் விஜய்யின் 30வது படத்தின் தலைப்பும் மூன்று எழுத்தில் அமைந்துள்ளது.
கைதி படத்தின் மாபெரும் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகர் கார்த்தி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தலைப்பை வெளியிட்டுள்ளார்.

மூன்றெழுத்து
தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து பெயர்கள் மற்றும் படங்கள் எப்போதுமே வெற்றி பெறும் மேஜிக்கை கொண்டிருப்பதால், இந்த படத்திலும் மூன்றெழுத்து டைட்டில் ஒரு மேஜிக்கை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னடா இவன் டைட்டிலை சொல்லாமல், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான பழைய மூன்றெழுத்து படத்தின் வசனத்தை போல வழ வழவென இழுத்துக் கொண்டிருக்கிறானே என நினைக்காதீர்கள். அந்த மூன்றெழுத்து டைட்டில் 'சினம்'.

சிங்கம், நரி
மகிழ்திருமேனி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான தடம் படம் அருண் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும், பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தில் அருண் விஜய் சிறப்பு தோற்றத்தில் மாஸ் காட்டியிருந்தார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாஃபியா படத்தின் சிங்கம், நரி டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சினம்
இந்நிலையில், தற்போது குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 30வது படத்திற்கு சினம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மூவி ஸ்லைட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் காக்கி யுனிஃபார்ம் அணிந்த காவல்துறை அதிகாரியாக களமிறங்கும் அருண் விஜய், தனது எதிரிகளுக்கு எதிராக சினங் கொண்ட சிங்கமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஃபார்முலா
நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற மென்மையான படங்களை கொடுத்த இயக்குநர் குமரவேலன், அருண் விஜய்யை வைத்து ஒரு ஆக்ஷன் பேக்ட் படத்தை கொடுப்பார் என்றும் தனது பழைய பாணி ஃபார்முலாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தை இயக்குவார் என்றும் அருண் விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











