பேசாமலேயே மக்கள் இதயங்களை வென்றேன்.. பாலாவுக்கு நன்றி சொன்ன வணங்கான் அருண் விஜய்
சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், ரிதா, மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்த வணங்கான் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் அருண் விஜய்க்கு மிகச்சிறந்த பெயர் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். அந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் மிக மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா என்று பலரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு அவர் எடுக்கும் படங்கள் இருக்கும். படம் இயக்க வந்து 25 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இதுவரை 10க்கும் குறைவான படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் காலங்கடந்து நின்று பேசும் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கூறுவார்கள். அப்படிப்பட்ட பாலா கடந்த சில வருடங்களாகவே சில பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்துவந்தார்.

என்ன பிரச்னை?: அதாவது ரீமேக் செய்வதில் உடன்பாடு இல்லாத பாலா விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார். ஆனால் படத்தை விக்ரமோ இந்தப் படத்தின் மேக்கிங் சரியில்லை என்று கூறி வர்மா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அது பாலாவுக்கு பெரும் அவமானமாகவே பார்க்கப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். அதற்கு காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்பட்டன.
வணங்கான்: இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். ஆனால் இரண்டு பேரும் சில காரணங்களால் அந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற முடியவில்லை. இருவருக்கும் பிரச்னை என்றெல்லாம் தகவல்கள் கசிந்தன. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை இரண்டு பேருமே அனைவருக்கும் உணர்த்திவிட்டார்கள். சூர்யா படத்திலிருந்து விலகிய பிறகு அருண் விஜய் இந்தப் படத்துக்குள் வந்தார். படத்தின் ஷூட்டிங்கும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடந்து முடிந்தது.
கலவையான விமர்சனம்: படமானது கடந்த பத்தாம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. வழக்கமான பாலாவின் டெம்ப்ளேட்டுகள் அனைத்துமே இந்தப் படத்திலும் இருந்தன. அதேசமயம் மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு முக்கியமான சீனை கண்ணிய குறைவோடு பாலா படமாக்கிவிட்டார்; பாலியல் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் பாலா இந்த சமூகத்தை 30 வருடங்களுக்கு பின்னே இழுத்திருக்கிறார் என்ற விமர்சனங்கள் சத்தமாகவே கேட்கின்றன. அதேசமயம் அருண் விஜய்யின் நடிப்பு பலரையும் ரசிக்க வைத்தது. அவர் கோட்டி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.
அருண் விஜய் நன்றி: இந்நிலையில் இயக்குநர் பாலாவுக்கு அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் போட்டிருக்கும் பதிவில், "என்னை கோட்டியாக வணங்கான் படத்தில் வாழ வைத்த என்னுடய இயக்குநர் பாலாவுக்கு மனமார்ந்த நன்றிகள். கோட்டியாக நடிக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம். இந்தப் படத்தில் நான் பேசாமலேயே மக்களின் இதயங்களை வென்றதற்கு நீங்கள்தான் (பாலா) காரணம். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை எனக்கு நீங்கள் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். இதற்கு நான் உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











