கனத்த இதயத்துடன் கடிதம் எழுதிய அருண் விஜய்..வணங்கான் எப்போ ரிலீஸ் தெரியுமா?..சம்பவம் செய்வாரா பாலா?
சென்னை: பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத்தனை வருடங்களாக சினிமாவில் அவர் இருந்தாலும் அவருக்கென்று சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் சிறந்த நடிகர் என்ற பெயரைக்கூட பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் பாலாவின் பட்டறைக்குள் அவர் இப்போது சென்றிருப்பதால் அவருக்கு கண்டிப்பாக வணங்கான் வாழ்க்கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றி வைத்த இயக்குநர்களில் பாலாவுக்கும் இடம் உண்டு. அவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்கள் யாரும் பேசாத விஷயத்தை திரையில் பேசியது. இந்திய அளவில் முக்கிய இயக்குநர் என்ற அந்தஸ்தையும் அவருக்கு அந்தப் படங்கள் பெற்றுக்கொடுத்தன. ஆனால் அவர் கடந்த சில வருடங்களாகவே தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்து ஷூட்டிங்கும் சென்றார்.

விலகிய சூர்யா: ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்த சூழலில் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். இதனையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை மீண்டும் ஆரம்பித்தார் பாலா. அருண் விஜய்யும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான சிறப்பை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறார். எனவே சூர்யா, விக்ரமுக்கு எப்படி பாலா தனது படங்கள் மூலம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாரோ அருண் விஜய்க்கும் பெற்றுக்கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலங்கிய குடும்பம்: படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்புகூட வணங்கான் படத்தை அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் பார்த்ததாகவும் அப்போது விஜயகுமார் கலங்கிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி தனது மகனின் திரையுலக வாழ்க்கையில் வணங்கான் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் விஜயகுமார் நெகிழ்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எப்போது ரிலீஸ்: அதுமட்டுமின்றி படத்தை பார்த்த பாலாவின் நண்பர்களும் இது அவருக்கு தரமான கம்பேக்காக அமையும் என்றும் கூறிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. அதன்படி வணங்கான் படமானது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அருண் விஜய் கடிதம்: முன்னதாக அருண் விஜய் நேற்று பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
வார்த்தைகள் இல்லை: நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.
எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











