வெளிநாடுகளில் மட்டும் 1000 அரங்குகள்: லிங்காவின் வெளிநாட்டு உரிமையை வாங்கினார் அருண்பாண்டியன்!

இந்தப் படத்தை சீனா உள்பட பல்வேறு நாடுகளில் 1000 அரங்குகளுக்கு மேல் வெளியிடப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம் நடித்து வரும் படம் லிங்கா. இந்தப் படம் ரஜினி பிறந்த நாள் அல்லது பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
படத்தின் உள்நாட்டு விநியோக உரிமை பெரும் தொகைக்கு கைமாறியுள்ளது. கேரள, கர்நாடக, ஆந்திர வெளியீட்டு உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டது. வட மாநிலங்களில் வெளியிடுவதற்கான உரிமையும் விற்கப்பட்டது.
வெளிநாடுகளில் இந்தப் படத்தை ஈராஸ் வெளியிடும் என கூறப்பட்டது. இப்போது ஈராஸ் மற்றும் அய்ங்கரனில் ஒரு காலத்தில் பங்குதாரராக இருந்த அருண்பாண்டியன், தனது ஏ அண்ட் பி குழுமமும், சஞ்சய் வாத்வாவின் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும் இந்தப் படத்தின் விற்பனை உரிமையைப் பெற்றுள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட வெளிநாட்டு உரிமையா ஏ அண்ட் பி குழுமமும், சஞ்சய் வாத்வாவின் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனமும் பெற்றுள்ளன. ரஜினியின் பிறந்த நாளன்று இந்தப் படம் வெளியாகும்.
உலகமெங்கும் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. இந்த முறை கொரியா, சீனா, ரஷ்யா, வியட்நாம், கீவ், உக்ரைன் போன்ற நாடுகளிலும் அதிக அரங்குகளில் வெளியாகிறது. வெளிநாடுகளில் மட்டும் 1000-க்கும் அதிகமான அரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











