“தமிழகத்தையே தலை குனியச் செய்து விட்டது வாட்ஸ் அப்”.. பா.விஜய் வேதனை
ஆருத்ரா பட இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
Recommended Video

சென்னை : தமிழகமே தலை குனிந்து நிற்பதாக கவிஞரும், நடிகருமான பா.விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் 'ஆருத்ரா'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்கியராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆருத்ரா பட இசைத்தட்டை எஸ்.ஏ.சந்திரசேகரும், பாக்கியராஜும் இணைந்து வெளியிட, அதை பா.விஜயின் தந்தை பெற்றுக் கொண்டார்.

நன்றி:
விழாவில் பேசிய பா.விஜய், "இன்றைய சூழலில் ஒரு படத்தை எடுப்பது மிகவும் சுலபம். ஆனால், அதனை வெளியிடுவது தான் மிகவும் சவாலானது. அந்தவகையில் ஆருத்ரா படத்தை வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யு/ஏ சான்றிதழ்:
இந்தப் படத்திற்கு சென்சார் வாங்குவதற்குள் திகில் அனுபவமாகி விட்டது. முதலில் படத்தைப் பார்த்தவர்கள் இந்தப் படத்திற்கு என்ன சான்றிதழ் தருவதென்றே தெரியவில்லை எனக் கூறி ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி விட்டார்கள். அங்கிருந்த அதிகாரிகளும் படத்தைப் பார்த்து விட்டு, சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தார்கள். பின்னர் சில வன்முறைக் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.

தாக்கம்:
ஆனால் படத்தை வெகுவாக அவர்கள் பாராட்டினார்கள். அவசியமான பதிவு எனக் கூறினார்கள். நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை நான் உருவாக்கினேன். தற்போது நிகழ்ந்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடியாக இப்படம் இருக்கும். சரியான சந்தர்ப்பத்தில் இப்படம் வெளியாகிறது என நினைக்கிறேன்.

தலை குனிவு:
ஒரு குழந்தையை பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு. ஆனால் நம் தமிழகத்தில் பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் போனைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக ஆருத்ரா இருக்கும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











