அருவி அப்பாவிடம் கேட்கும் அந்தக் கேள்வி..!
Recommended Video

சென்னை : அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் நாயகியாக நடித்திருக்கும் 'அருவி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
'அருவி' படத்தில் அருவியாக நடித்திருக்கும் அதிதி பாலனின் சிறப்பான நடிப்பை திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் புகழ்ந்திருக்கின்றனர்.
அருவி பேசும் வசனங்கள், பலரையும் நிற்கவைத்துக் கேள்வி கேட்கின்றன. அவற்றில், அப்பாவிடம் அருவி கேட்கும் கேள்விகள் எல்லோர் மனதையும் கரைத்துக் கண்கலங்கச் செய்யும்.

அருவி
அன்பான குடும்ப அமைப்பில் சுதந்திரமாக வாழும் பெண் ஒருத்தி, எதிர்பாராவிதமாக திடீரென தூக்கி வீசப்படுகிறாள். அவள் இந்த அளவுக்கு நிராகரிக்கப்படுவதற்கான காரணம் என்ன... அப்படி நிராகரிக்கப்பட்டவள் இந்தச் சமூகத்திற்குச் சொல்ல வருவது என்ன என்பதுதான் 'அருவி' படத்தின் கதை.

சென்டிமென்ட்
குடும்பம் எனும் அமைப்புக்குள் அன்பு பிணைந்து வாழும் அருவி, செய்யாத தவறால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப் படுகிறாள். அதுநாள் வரை அவள் மீது குடும்பம் கொண்டிருந்த அன்பு எப்படி ஓரிரு நிமிடங்களில் முற்றிலுமாக விடுபட்டுப் போகும் என்பதுதான் பெரும் கேள்வி. ஆனால், நடைமுறை யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

அருவியின் அப்பா
தனக்கு சிகரெட் நாற்றம் பிடிக்காததால், சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே நிறுத்திவிட்ட அப்பா, தான் எவ்வளவு சொல்லியும் தன்னை துளியும் நம்பவில்லை எனும் நிலைக்கு வரும்போது எவ்வளவு வேதனைகளையும், வலியையும் அவள் உணர்வாள் என்பதை அருவி அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது.

அருவியின் கேள்வி
'அருவி படத்தின் இறுதிக் காட்சிகளில், தன் அப்பாவிடம் அருவி கேட்கும் சில கேள்விகள் நம் மனதைக் கனக்கச் செய்யும். "என்ன விட்டுட்டு எப்படிப்பா உன்னால இருக்க முடியுது?" என அருவி கேட்டதும் அவளது அப்பா உடைந்து அழுவார். பார்வையாளர்களும் தான்.

அப்பாவுக்கு உணர்த்தும் அருவி
வறட்டு சமூகத்தின் கேள்விகளுக்கு உள்ளாகவேண்டியிருக்கும் என அஞ்சி வீட்டை விட்டு வெளியேற்றி இருந்தாலும், பெற்ற மகள் எனும் பாசம் இல்லாமல் போய்விடுமா என்ன? அருவி இந்தச் சமூகத்திற்கு எதையும் நிரூபிக்க பிரியப்படவில்லை. ஆனால், தன்னை முழுமையாக நேசித்த அப்பாவுக்கு தான் உண்மையானவள் என்பதை உணரவைக்க விரும்புகிறாள்.

அப்பாவின் கண்ணீர்
மரணம் தன்னை ஏந்திக் கொண்டிருக்கும் நேரத்தில், அவள் விரும்புவது அன்பானவர்களின் அருகாமையை. அவள் கண்களில் தெரிகிற ஏக்கம் ஒரு யுகத்தின் கேவல். அவளது கண்ணீர் துன்பம் துடைக்கும். அவளது ஒவ்வொரு கேள்வியும் அவளது தந்தையைக் கசிய வைக்கும். அவளது கடைசிப் புன்னகை நீண்ட ஆசுவாசமொன்றைத் தருகிறது.


Click it and Unblock the Notifications











