”வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே.. பாக்ஸிங்கை விட ரத்த பூமி”; ஆர்யா போட்ட அசத்தல் ட்வீட்!
சென்னை: ஆள்மாறாட்ட மோசடியால் மிகவும் மன வேதனை அடைந்து வந்த ஆர்யா ஒரு வழியாக உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அதிலிருந்து மீண்டுள்ளார்.
இந்நிலையில், புதிதாக ட்விட்டருக்கு வந்த நடிகர் பசுபதியை வரவேற்கும் விதமாக நடிகர் ஆர்யா போட்டுள்ள அசத்தல் ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் பசுபதி ரங்கன் வாத்தியாராக நடித்து மிரட்டி இருந்தார்.

மீம் திருவிழா
அந்த படத்தில் நடிகர் ஆர்யாவுடன் பசுபதி சைக்கிளில் செல்லும் புகைப்படத்தை பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை நடந்து சென்ற புகைப்படத்தை எந்த அளவுக்கு மீம் போட்டு மிரட்டினார்களோ அதை விட ஒரு படி மேலே சென்று மீம் திருவிழாவையே மீம் க்ரியேட்டர்கள் கொண்டாடினர்.

வேம்புலி போட்டோஷூட்
ரங்கன் வாத்தியாரை கபிலன் ஆர்யா சைக்கிளில் அழைத்துச் சென்ற மீம் வைரலான நிலையில், வேம்புலி மற்றும் டான்சிங் ரோஸ் தங்களது வாத்தியாரை சைக்கிளில் அமர வைத்து நிஜமாகவே ஓட்டிச் செல்வது போல போட்டோஷூட்களை நடத்தியும் வெளியிட்டு வைரலாக்கினார்.

தொடர் வெற்றி
நடிகர் ஆர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான டெடி படத்தைத் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்பதே ரசிகர்கள் மட்டுமில்லாமல் நடிகர் ஆர்யாவின் கோரிக்கையாகவும் உள்ளது.

பெண்ணை ஏமாற்றி விட்டார்
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணான வித்ஜா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா ஆன்லைனில் மோசடி செய்து பல லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக அந்த பெண் அதிரடியாக கொடுத்த புகார் நடிகர் ஆர்யாவுக்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கியது.

நிஜ குற்றவாளிகள்
ஆனால், நடிகர் ஆர்யா போல மிமிக்ரி செய்து பேசி அந்த பெண்ணிடம் ரூ. 71 லட்சம் வரை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹுசைனி பையாக் ஆகியவரை சைபர் கிரைம் போலீசார் ஆர்யாவின் வாக்குமூலத்திற்கு பிறகு நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் கைது செய்துள்ளனர்.

நிம்மதி பெருமூச்சு
டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியை கூட மனதளவில் முழுமையாக கொண்டாட முடியாமல் தவித்து வந்த நடிகர் ஆர்யாவுக்கு நிஜ குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ள செய்தி நிம்மதி பெருமூச்சு விட வைத்தது. காவல் துறைக்கும் தனது நன்றிகளை கூறியுள்ளார் ஆர்யா.

இது ரத்த பூமி
இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே.. பாக்ஸிங்கை விட ரத்த பூமி.. உன்னோட பேருல இங்க நிறைய பேரு இருக்காங்க.. அதெல்லாம் தெரிஞ்சதும் ஒரிஜினல் நான் தாண்டானு உள்ள வந்த பாத்தியா. உன் மன்சே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போவோம்" என ட்வீட் போட்டு நடிகர் பசுபதியின் ஒரிஜினல் ஐடியை அறிவித்திருக்கிறார் ஆர்யா.

பசுபதி பதில்
"ஆமாம்.. கபிலா, பாக்ஸிங்கே உலகம்னு இருந்துட்டேன், பரம்பரைக்கு ஒன்னுனா மொத ஆளா வந்துருவேன், நான் உன் சைக்கிள்லையே உட்காந்துக்குறேன், என்னை எல்லா இடத்துக்கும் கூட்டிக்கினு போ" என ஆர்யாவின் ட்வீட்டுக்கு அதே பாணியில் நடிகர் பசுபதி அளித்துள்ள பதில் ட்வீட்டும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

போலிகள் ஜாக்கிரதை
ஆர்யா போலவே நடித்து ஆன்லைனில் ஒரு பெண்ணிடம் பல லட்சம் பணத்தை பறித்து அதில் ஆர்யாவையே சிக்க வைக்க முடிகிறது. இங்கே பல பிரபலங்கள் பெயரில் பல போலி ஐடிக்கள் உலாவி வருகின்றன. அதிகாரப்பூர்வமாக ஒரிஜினல் என தெரியாத நிலையில், யாரும் யாரையும் பின் தொடரவோ அவர்கள் விரிக்கும் வலையில் விழவோ கூடாது என தனது ட்வீட் மூலம் மறைமுகமாக ரசிகர்களுக்கு எடுத்துரைத்து இருக்கிறார் நடிகர் ஆர்யா.

எனிமி
டெடி, சார்பட்டா பரம்பரை படங்கள் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடித்துள்ள எனிமி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் எனிமி படமும் ஆர்யாவுக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











