Nagesh: காட்சி முடிந்த பிறகும் பல மணி நேரம் அழுதுக்கொண்டிருந்த நாகேஷ்.. பிறந்த நாள் ஸ்பெஷல்!
சென்னை: ஒல்லியான உடல்...பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும் பாடி லாங்குவேஜ், அபரிமிதமான நடிப்பு என்று இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நடிகர் நாகேஷ்.
உன்னதமான கலைஞர்கள் இறந்தாலும் தங்களின் ஈடு இணை இல்லாத கலையால் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடிகர் நாகேஷின் 90வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகளை இப்போது பார்க்கலாம்.
நாகேஷின் உண்மையான பெயர்: 1933ம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்தவர் நாகேஷ். கிருஷ்ணன் ராவ், ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நாகேஷின் இயற்பெயர் நாகேஸ்வரன்.
ரயில்வேயில் வேலை: கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்து வந்தார் நாகேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
முதல்பரிசு: டாக்டர் நிர்மலா நாடகத்தில், தை தண்டபாணி என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கை தட்டலை பெற்றார். மேலும், ம.ரா என்பவரின் நாடகத்தில் 17வது காட்சியில், வயிற்றுவலி நோயாளியாக நடித்தார். இவரது நடிப்பை பாராட்டி முதல் பரிசை வழங்கினார் எம்ஜிஆர்.
அழுதுகொண்டே இருந்த நாகேஷ்: 1966 ஆம் ஆண்டு வெளிவந்த திரில்லர் திரைப்படமான யாருக்காக அழுதேன் படத்தை படமாக்கும் போது, காட்சி முடிந்த பிறகும் பல மணிநேரம் அழுதுக்கொண்டே இருந்தார். நாகேஷ். எம்ஜிஆருடன் 45 திரைப்படத்திலும், மனோரம்மாவுடன் 19 படத்திலும் நாகேஷ் நடித்துள்ளார்.
கவலைப்படாம நடி: தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்த நாகேஷ், இந்த படத்தில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குநர் கோபப்பட கவலைப்படாம நடி நீ கலைஞன் என்று எம்.ஆர்.ராதா நம்பிக்கை ஊட்டினார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். நாகேஷுக்கு திருப்புமுனையாக அமைந்த ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிப்பு: நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. நாடகம் நன்றாக இல்லை என்றால் நடிகன் உள்ளே ஓடவேண்டும், சினிமா நன்றாக இல்லை என்றால், மக்கள் வெளியே ஓடவேண்டும் என்று நாகேஷ் கூறியிருந்தார்.
ஆயிரம் படங்கள்: கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு 1974 ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நாகேஷையும், அவரின் ஒப்பில்லா முக பாவத்தினையும் அவரது ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.


Click it and Unblock the Notifications











