மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி.. சைக்காலஜிக்கல் த்ரில்லர் 'எக்கோ'வில் தனித்துவ கேரக்டர்
சென்னை: ஐந்து வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி.
பிரபல இந்தி நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. தமிழில், தில் படத்தில் 'தில்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.
தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் கொடூர வில்லனாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.

தேசிய விருது
ரஜினியின் பாபா, விஜய்யின் பகவதி, கில்லி உள்பட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் நடித்து வரும் ஆசிஷ் வித்யார்த்தி, நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர்.

சிறந்த துணை நடிகர்
1994 ஆம் ஆண்டு வெளியான கோவிந்த் நிஹலானியின் Drohkaal படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார் ஆசிஷ் வித்யார்த்தி. இந்தப் படம்தான் தமிழில் கமல்ஹாசன், அர்ஜுன் நடிப்பில் குருதிப்புனல் என்ற பெயரில் ரீமேக் ஆனது. 2015-ம் ஆண்டு தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் கடைசியாக தமிழில் நடித்திருந்தார்.

தனித்துவ கேரக்டர்
அதற்குப் பிறகு, சரியான கதைகள் அமையாததால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வரும் 'எக்கோ' படத்தில் தனித்துவமான கேரக்டரில் நடித்து வருகிறார். 'எக்கோ' படத்தின் கதை பிடித்திருந்ததால், உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வித்யா பிரதீப்
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்கும் இந்தப்படத்தை நவீன் கணேஷ் இயக்கி வருகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











