பண்ணை வீட்டில் கோலாகலமாக நடந்து முடிந்த அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணம்!
சென்னை: நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நடிகர் அசோக் செல்வன் இன்றைய கல்லூரி பெண்களின் மனம் கவர்ந்த கள்வனாக இருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன், பிளாக் எனும் குறும்படத்தை எழுதி இயக்கி பிரபலமானார்.
நடிகர் அசோக்செல்வன்: 2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் அப்பாவி இளைஞனாக என்ட்ரி கொடுத்த, அசோக் செல்வன், அந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து ரகளை செய்து இருப்பார். இப்படத்தின் வெற்றிக்கு பின், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அசோக் செல்வன்.

ஏராளமான பெண் ரசிகைகள்: பீட்சா 2, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான கதை அம்சம் கொண்ட படங்களாகும். ஓ மை கடவுளே படத்தின் மூலம் அசோக் செல்வனுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் கிடைத்தார்கள். அதே போல வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை படத்தில், மூன்று ஹீரோயின்களுடன் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என புகுந்துவிளையாடி இருப்பார். நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வனின் சமீபத்திய படங்களான நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
காதல் திருமணம்:அசோக் செல்வன், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்தார். இருவரும் ப்ளு ஸ்டார் என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால், செப்டம்பர் 13ந் தேதி திருமணம் நடைபெறும் என்ற சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவின.

கோலாகல திருமணம்: இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் அருண்பாண்டினின் பண்ணை வீட்டில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

அன்பிற்கினியாள்: நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகரும், இயக்குநருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார். இவர், தும்பா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மேலும் இவர் தனது அப்பா அருண் பாண்டியனுடன் சேர்ந்து அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது.


Click it and Unblock the Notifications











