மாடல் நடிகையின் மார்பிங் வீடியோக்கள்.. 10 லட்சம் சம்பாதித்த எக்ஸ் லவ்வர்.. இப்போ கம்பி எண்ணுறாரு!
மும்பை: அசாமைச் சேர்ந்த அர்ச்சித்தா புகனின் முன்னாள் காதலன் பிரதிம் போரா, பழிவாங்கும் நோக்கத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இணையவழி துன்புறுத்தலில் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளது.
அசாம் காவல்துறையினர், புகன் அளித்த புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதிம் போராவை டின்சுகியா மாவட்டத்தில் கைது செய்தனர். தன்னுடைய உருவத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவித் தன்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இருப்பதாக அவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் போராவைச் சந்தேக நபராக அடையாளம் கண்டனர்.

காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, மெக்கானிக்கல் இன்ஜினியரான போராவுக்கும் புகனுக்கும் கல்லூரிக் காலம் முதலே பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் பிரிந்த பிறகு ஏற்பட்ட தனிப்பட்ட மனக்குறைகளின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது. இது குறித்து திப்ருகார் மூத்த காவல் கண்காணிப்பாளர் சிசல் அகர்வால் கூறுகையில், "கைது செய்யப்பட்ட பிரதிம் போரா, பாதிக்கப்பட்டவரின் ஒரு புகைப்படத்தை வைத்துப் பல்வேறு AI மென்பொருட்களைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களை உருவாக்கியுள்ளார்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவருக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கடந்த காலத் தொடர்பு உள்ளது. சில தனிப்பட்ட காரணங்களுக்காக, அவர் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டார். AI தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர் ஆபாசத் தொழிலில் சேர்ந்தது போல் தோற்றமளிக்கச் செய்யப்பட்டது. ஆனால் அது பொய்யானது" என்றார். போரா, புகனின் பெயரில் ஒரு போலியான சமூக ஊடகக் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, சுமார் பத்து லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் முடிவில் அர்ச்சிதா புகனின் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பகிரவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி உள்ளனர். மேலும் இணையவழித் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர். அகர்வால் கூறுகையில், "இது குறித்து நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளதால், மக்கள் இந்த படங்களை பரப்புவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவரைக் குறி வைக்க வேண்டாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











