Atlee: உங்களை வெச்சு செய்யறாங்களா.. அப்படினா இதுக்கு ரெடியா இருங்க.. கௌரவ டாக்டர் பட்டம் வாங்கிய அட்லீ பேச்சு!
சென்னை: இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மொத்த இந்திய சினிமாவிலும் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படமான அல்லு அர்ஜுன் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இந்நிலையில் அவர் படித்த சத்யபாமா கல்லூரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் இன்று அதாவது ஜூன் 14ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் பேசும்போது," நான் இன்றைக்கு பொய் பேசக்கூடாது, உண்மை மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். நான் இந்த கல்லூரியில் சேர்ந்த முதல் ஐந்து நாட்களிலேயே ஷார்ட் பிலிம் எடுக்கிறேன், கேமரா வேண்டும் என்று கேட்டேன். இந்த கல்லூரியின் தாளாளர் எடுத்துக்கோபா, சீக்கிரமே டைரக்டர் ஆகிடு எனக் கூறினார். அவர் கூறியதைப்போல் நான் இன்றைக்கு இயக்குநராக வளர்ந்து நிற்கிறேன்.

அட்லீ நெருப்பா இருப்பான்: எனது படங்களைப் பார்த்து நான் காப்பி அடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆமாம், நான் காப்பி அடிக்கிறேன், எனது நிஜ வாழ்க்கையில் இருந்து, அதன் தாக்கத்தின் மூலம்தான் படம் எடுக்கிறேன். பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரத்தை எனது சேன்சிலர் ஜே.பி. ஆர் சாரைப் பார்த்து தான் உருவாக்கினேன். இந்த நாளில் நான் ஒன்று சொல்கிறேன், கல்லூரி வாழ்க்கையில் இருக்கும் உங்களை தொலைத்து விடாதீர்கள். இன்றைக்கு நான் திரைத்துறையில் இயக்குநராக இருப்பது என்பது நெருப்பு மேல் இருப்பதற்குச் சமம். ஆனால் காலேஜ் படிக்கும் போது இருந்த அந்த அருண்குமார் ( அட்லீ) நெருப்பாக தான் இருந்தான். இப்போது நான் 5 மணி நேரம் தூங்குகிறேன். ஆனால் காலேஜ் படிக்கும் போது 2 மணி நேரம் தான் தூங்குவேன்.
குட்டிக் கதை: விஜய் அண்ணா ஸ்டைலில் ஒரு குட்டிக் கதை சொல்லி முடிக்கிறேன். ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தது. அங்கு வந்தவர்கள் வாசலில் இருந்த கல்லைக் கடந்து உள்ளே இருந்த சிலையை வணங்கி விட்டுச் சென்றார்கள். ஒருநாள் வாசலில் இருந்த கல், சிலையை பார்த்து, நீயும் கல் தான், நானும் கல் தான். என்னைக் கடந்து செல்கிறார்கள், ஆனால் உன்னை மட்டும் வழி படுகிறார்களே என்று கேட்டது. அதற்கு சிலை சொன்னது, உன்னை இரண்டு பக்கம் மட்டும் தட்டி விட்டு விட்டுவிட்டார்கள். என்னை ஒரு ஆயிரம் பேர் வெச்சு செய்து, சிலையாக்கி உள்ளார்கள். அப்படியானால் எனக்கு அதற்கான மரியாதை கிடைக்கத்தான் செய்யும் என்று கூறியதாம்" எனப் பேசினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தான் அடுத்து இயக்கும் படத்தின் மூலம் இந்தியாவுக்கே பெருமை தேடித் தருவதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











