ஆனந்த் அம்பானி சங்கீத் நிகழ்ச்சி.. அட்லீ முதல் ஆலியா பட் வரை.. படையெடுத்த பாலிவுட் பிரபலங்கள்!
மும்பை: நிதா அம்பானியின் கல்சுரல் சென்டரில் நேற்று இரவு நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற காட்சிகள் தற்போது வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் வெளியாகி உள்ளன.
உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி ஜாம் ஜாம் என நடைபெறவுள்ளது.

ஆனால், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் கடந்த மார்ச் மாதம் முதலே களைகட்ட தொடங்கி விட்டன. ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற்ற ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் என இந்திய சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

ஆனந்த் - ராதிகா சங்கீத்: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் ஜூலை 12ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு நேற்று கோலாகலமாக சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிவுட் படங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பிரபல அமெரிக்க பாடகரான ஜஸ்டீன் பீபர் பாடல்களை பாடி அசத்தினார். மேலும், பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடனமாடி திருமண விழாவை களைகட்ட வைத்தனர்.

அட்லீ முதல் ஆலியா பட் வரை: ஜவான் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட் பிரபலமாகவே மாறிவிட்டார். அட்லீ மற்றும் பிரியா அட்லீ ரன்வீர் சிங் அணிவது போல கலர் கலரான உடைகளை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளனர். கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூருடன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மணமக்களை மேடையேறி வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சல்மான் கான் முதல் தீபிகா படுகோன் வரை: கர்ப்பவதியாக இருக்கும் தீபிகா படுகோன் சமீபத்தில் கல்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், மும்பையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் பிரபல தியேட்டர் ஒன்றுக்கு சென்று கல்கி திரைப்படத்தை பார்த்த காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சிக்கும் தனது கணவருடன் தீபிகா படுகோன் சென்றார். சல்மான் கான், கரீனா கபூர், சைஃப் அலி கான் என பல பாலிவுட் பிரபலங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

50 ஆயிரம் பேருக்கு சாப்பாடு: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியின் போது குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள சுற்று வட்டார மக்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேருக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்தார் முகேஷ் அம்பானி. நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் அனைத்து விதமான விருந்துகளும் கவனிப்புகளும் பார்ட்டிகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











