அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை வரை..பா.ரஞ்சித்தின் 10 ஆண்டுகள்
சென்னை: தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாற்போல் இயக்குநர்கள் உருவாகிறார்கள்.
2012 ஆம் ஆண்டு யதார்த்தமான காதல் கதையின் மூலம் சாதாரண மக்களை பிரதிபலிக்கும் கதையை எடுத்து பிரபலமானார் பா.ரஞ்சித்.
2012 முதல் 2022 வரை தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் என பெயர் வாங்கும் விதத்தில் பல படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் பா.ரஞ்சித்.

ட்ரெண்ட் செட்டர் இயக்குநர்கள்
தமிழ் திரையுலகில் எப்போதோ 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த இயக்குநர்கள் தோன்றுவது வழக்கம். அவர்கள் மூலம் தமிழ் சினிமா புதிய ட்ரெண்டை நோக்கி பயணிக்கும், அவர்களைப்பார்த்து மற்ற இயக்குநர்கள் சினிமாத்துறையில் கால் பதிப்பார்கள். இது தமிழ் சினிமாவில் காலகாலமாக நடக்கும் ஒன்று.

1950 களின் சிறந்த இயக்குநர்கள்
கே.சுப்ரமணியம் சுதந்திர போராட்ட காலத்தில் பல நவீனங்களை திரைக்கு கொண்டு வந்தவர். அந்தநாள் என்கிற அற்புதமான படத்தை கொடுத்த வீணை பாலச்சந்தர், மலைக்கள்ளன் உள்ளிட்ட பல படங்களை கொடுத்த எல்லீஸ் ஆர்.டங்கன்,பீம்சிங், சாணக்கியா, ஏசி.திருலோகச்சந்தர். பா.நீலகண்டன் போன்ற இயக்குநர்களின் படம் இளம் இயக்குநர்களுக்கு பாடம்.

திரைக்கதையில் ஆதிக்கம் செலுத்திய இயக்குநர்கள்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜாவர் சீத்தாராமன் போன்றவர்கள் திரைக்கதை பின்நாளில் மகேந்திரன், கே.பாலச்சந்தர், விசு போன்றவர்களுக்கு அடித்தளமாக அமைந்தது. கே.பாலச்சந்தர் நடுத்தர வர்க்க மக்களின் கதை, நாடக பாணி கதைகளை உருவாக்கினார், அதைப்பின்பற்றி விசு, மவுலி, வி.சேகர், கிரேசி மோகன் போன்றோர் வந்தனர்.

தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட பாரதிராஜா
இவர்கள் ஒரு பாதையில் பயணிக்க ஸ்டுடியோவிலிருந்த தமிழ் திரையுலகை கிராமம் நோக்கி இயல்பாக நகர்த்தினார் பாரதிராஜா, அதே காலகட்டத்தில் மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்களும் வித்தியாசம் காட்டினர். இதையொட்டி பாக்யராஜ் முதல் பாண்டியராஜன் வரை இயக்குநர்கள் வந்தனர். 80 களின் இறுதியில் மணிரத்னம், அவரைப் பின்பற்றி 90 களில் ஆர்.கே.செல்வமணி,ஷங்கர் வந்தனர்.

சினிமாத்தனம் இல்லாமல் படம் எடுக்க வந்த பாலா..பா.ரஞ்சித்
சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக படம் எடுக்கும் விதத்தை பாலா தொடங்கி வைத்தார் ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய இயல்பான வாழ்க்கை நிலையையையும், குடிசைப்பகுதிகளை யதார்த்தமாகவும் காட்டி கால் பதித்தவர் பா.ரஞ்சித். இதற்கு முன் யாரும் செய்யாததை இவர் செய்தாரா? எனக் கேட்கலாம். அப்படி யாரும் சாதனை செய்ய முடியாது. ஆனால் சொல்வதை வித்தியாசமாக சொன்னவர்கள் வென்றார்கள், அந்த வகையில் பா.ரஞ்சித் 10 ஆண்டுகளில் வென்றுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கதையை பேசிய படங்கள்
ஜாதி இல்லாமல் எதுவும் இல்லை, ஒடுக்கப்படுதல் எங்கும் உள்ளது என்பதை அழுத்தமாக பதிவிட்டு துணிந்து படம் இயக்கியும், அதுபோன்ற படங்களை தயாரித்து புதிய சிந்தனை உள்ள இயக்குநர்களுக்கு வாய்ப்பும் அளித்து வருகிறார் பா.ரஞ்சித். அந்த வகையில் இவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள் என்கிற அற்புதமான படமும், ஒரு சிறந்த இயக்குநரும் கிடைத்தார்.

கமர்ஷியல் உதவி இயக்குநர், யதார்த்த இயக்குநர்
பா.ரஞ்சித் அறிமுகமே வித்தியாசமானது, சென்னை 28, மங்காத்தா போன்ற அதிரடி கிரைம் கதைகளை கொடுத்த வெங்கட் பிரபுவின் அசிஸ்டெண்ட் தான் வெளியே வந்து கொடுத்த படம் அட்டக்கத்தி. ஒரு நகர்புற இளைஞனின் மன நிலை, அவனது வாழ்க்கைச் சூழ்நிலை. இனக்கவர்ச்சியை காதலாக நினைப்பது, மனித மனநிலை ஒரே நிலையில் பிடிவாதமாக இருக்காது(தேவதாஸ் போல) என்பதை அழகாக சொன்ன படம் அது.

இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
இந்தப்படம் மூலம் சந்தோஷ் நாராயணன் என்கிற வித்தியாசமான இசையமைப்பாளர் அறிமுகமானார். அவரது வித்தியாசமான இசை ஏ.ஆர்.ரஹ்மான் போலும் இல்லாமல், யுவன் சங்கர் ராஜா போலும் இல்லாமல் தனித்துவமான ஒன்றாக இருந்தது. பா.ரஞ்சித் 10 ஆண்டுகளில் எடுத்த அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பல அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளார்.

10 ஆண்டுகளில் பா.ரஞ்சித் சாதித்தவை
10 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை என்பது சாதாரணமாக கடக்கும் காலம், அதில் சிறந்த படங்களை கொடுப்பது மிகவும் கடினம். சிலர் 3,4 ஆண்டுகள் காணாமல் போய் விடுவார்கள். சிலர் ஹீரோக்களின் அழுத்தத்தால் தனது தனித்துவத்தை இழந்து காணாமல் போய்விடுவார்கள் ஆனால் பா.ரஞ்சித் அதில் வேறுபட்டவர். அட்டகத்தி வெற்றிக்குப்பின் மெட்ராஸ் என்கிற அரசியலை மையப்படுத்திய படம் ஒன்றை கொடுத்தார்.

களம் கண்ட காலா
அடுத்து உச்ச நடிகர் ரஜினியை வைத்து கபாலி என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தார், ரஜினியை வைத்து இயக்கிய காலா திரைப்படம் ரஜினிக்கும், பா.ரஞ்சித்துக்கும் ஒரு மைல் படம் எனலாம். பிரபல இந்தி நடிகர் நானாபடேகர் வில்லனாக நடித்து இன்றைய அரசியலுடன் இணைத்து தாராவி மக்கள் கதைபோல் திரைக்கதையுடன் கார்ப்பரேட்டுகள் அரசியல்வாதிகள் கைகோர்ப்பது பற்றி பேசியது காலா.

ஒடுக்குமுறை, கல்வியின் அவசியம் பற்றி பேசிய பரியேறும் பெருமாள்
காலா படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதே ஆண்டில் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். மாரி செல்வராஜ் எனும் இயக்குநர் அறிமுகமானார். அவரது கதை இயக்கத்தில் உருவான அற்புதமான படம் பரியேறும் பெருமாள். கல்லூரிகள் காதலை பற்றி பேசிய காலத்தில் காதல் முக்கியமல்ல கல்வி தான் முக்கியம் அதுதான் உன்னை உயர்த்தும் என்கிற கருத்தையும், ஜாதி ஒடுக்குமுறை குறித்தும் பேசிய படம் அது.

சாதித்த சார்பட்டா பரம்பரை
அடுத்து பா.ரஞ்சித் இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை. 1970- களில் வடசென்னையில் இருந்த குத்துச் சண்டை கிளப்புகள் குறித்த படம். அதன் இயக்கம், கலை, இசை அனைத்தும் பெரிதாக பேசப்பட்டது. கொரோனா காலம் என்பதால் ஓடிடி தளத்தில் படம் வெளியாகி வெற்றி பெற்றது. படம் வெளியானதில் அதில் நடித்த பலரும் பேசப்பட்டனர். ரங்கன் வாத்தியார் மீம்ஸ் பிரபலமானது.

சமூக அக்கறைக்கொண்ட பா.ரஞ்சித்தின் தைரியம்
பா.ரஞ்சித் தன்னை இயக்குநராக மட்டும் அல்லாமல் தான் பயணிக்கும் பாதையையும் தெளிவாக வகுத்து இயங்குகிறார். அவரது நீலம் ப்ரடக்ஷன் மூலம் பல நல்ல படங்கள் வெளியாகியுள்ளன. அரசியல் சமூக பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ரஞ்சித்தின் குரல் தைரியமாக ஒலிக்கிறது.
Recommended Video

கேரியர் பற்றி அஞ்சாமல் சமூக பிரச்சினை பற்றி பேசும் ரஞ்சித்
சினிமாக்காரர்களே கேரியர் ஸ்பாயிலாகிவிடும் என அஞ்சுகிற விஷயங்களிலும் தைரியமாக தனது கருத்தை வைக்கிறார். சினிமாவுக்காக சில கமர்ஷியல்களில் இறங்கினாலும் ரஞ்சித்தின் குரல் எப்போதும் விளிம்பு நிலை மக்களுக்காகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











