பாடல் உரிமை.. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்த இளையராஜா!
சென்னை: தான் இசையமைத்த படப் பாடல்களின் உரிமையை முறைகேடாக ஆடியோ நிறுவனங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள இளையராஜா, தனது பாடல் உரிமைக்கான ஆவணங்களை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கில், ‘நான் இசையமைத்த திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள் மீதான உரிமம் என்னிடம் உள்ளது.

ஆனால், இந்த பாடல்களை எந்த அனுமதியும் இல்லாமல் எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி விற்பனை செய்து வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், கேசட்டில் விற்பனை செய்யவும் அகி உள்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 5 நிறுவனங்களும் மேல்முறையீடு செய்தன.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், ‘இந்த வழக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள மறுக்கின்றனர். இருதரப்பினரும் தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் தாக்கல் செய்யவேண்டும். இந்த ஆதாரங்களை பதிவு செய்ய ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பி.கோகுல்தாசை, சட்ட ஆணையராக நியமிக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.
இதன்படி, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மைய கட்டிடத்தில் வைத்து நீதிபதி கோகுல்தாஸ் நேற்று விசாரணையை தொடங்கினார்.
இளையராஜா நேரில் ஆஜராகி, தன் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்தார். அதேபோல ஆடியோ நிறுவனங்களும் ஆவணங்களை தாக்கல் செய்தன.
இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











