‘ஆட்டோ சங்கர்’.. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘மினி சீரிஸ்’
ஆட்டோ சங்கர் என்ற பெயரில் மினி சீரிஸ் தயாரிக்கப்படுகிறது.
சென்னை : உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு 'ஆட்டோ சங்கர்' என்ற புதிய வெப் சீரிஸ் தயாரிக்கப்படுகிறது.

தமிழகத்தையே உலுக்கிய மாபெரும் கொலை வழக்குகளில் ஒன்று ஆட்டோ சங்கருடையது. ஆறு பேரைக் கொலை செய்ததற்காக, கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் கடந்த 1995ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில், இவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய வெப் சீரிஸ் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தனது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் பேபி ஷூ புரொடக்சன்ஸ் உடன் இணைந்து இந்த மினி சீரிஸை தயாரிக்கின்றார்.
இயக்குனர் அஹமத்திடம் மனிதன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரங்கா "ஆட்டோ சங்கர்" மினி சீரிஸை இயக்குகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த மினி சீரிஸில் பிரபல மலையாள நடிகர் ஷர்த் அப்பனி கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் ஸ்வயம், அர்ஜூன், வசுதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்கும்போது சென்சாரில் படக்குழு பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, இதற்கான மாற்று ஊடகமாக இணையத் தொடர்களை கையில் எடுத்துள்ளனர் பலர். அவற்றிற்கு சென்சார் பிரச்சினை இல்லை என்பதால் தங்கள் மனதில் பட்டதை தயக்கமின்றி சொல்ல முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சென்சார் இல்லாததால் இத்தகைய இணையத் தொடர்களில் ஆபாசம் அத்துமீறிக் காணப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











