அவதார் 3 படத்தில் பெரிய வித்தை இல்லை.. ஓயாமல் ஒப்பாரி.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் இதுதான்.. சிதைச்சிட்டார்
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் (அவதார் 3) திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீஸானது. முந்தைய பாகங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை போன்றே இதற்கும் எழுந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கும் படம் குறித்து பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
டைட்டானிக் உள்ளிட்ட உலக புகழ் பெற்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் கடந்த 2009ஆம் ஆண்டு அவதார் படத்தை இயக்கினார். ஏலியன்கள் பற்றி பலரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவைகளையே கதையின் நாயகர்களாகவும், நாயகிகளாகவும் வைத்து கேமரூன் நிகழ்த்தியிருந்த மாயாஜாலத்தை வார்த்தையில் அடக்கிவிட முடியாது. அவ்வளவு அட்டகாசமாக எடுத்து அந்தப் படத்தை உலகம் முழுவதும் மெகா ஹிட்டாக்கிவிட்டார். இப்படத்தை மொத்தம் ஐந்து பாகங்களாக எடுப்பேன் என்று தெரிவித்த கேமரூன் கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டாவது பாகத்தை உருவாக்கினார். இரண்டாவது பாகமும் வரவேற்பை பெற்றது.
அவதார் 3: சூழல் இப்படி இருக்க அவதார் படத்தின் மூன்றாவது பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்தை இப்போது இயக்கியிருக்கிறார். நேற்று உலகம் முழுவதும் படம் ரிலீஸானது. இம்முறையும் தனது விஷுவல் ட்ரீட்டை கொடுத்து ரசிகர்களுக்கு பெரிய விருந்தை படைத்திருக்கிறார் கேமரூன். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும் போல் இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் பூரித்துப்போயினர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்தியாவிலும் படத்தின் ரெஸ்பான்ஸ் சூப்பராகவே இருந்தது. நேற்று இந்தியாவில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், " இப்படத்தை மொத்தம் ஐந்து பாகங்களாக எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் பாகம் காடு, இரண்டாவது பாகம் நீர், மூன்றாவது பாகம் நெருப்பு என்று சொன்னார்கள். ஆனால் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அதிர்ச்சிதான் இருந்தது. பெரும்பாலும் நீரில்தான் இந்தப் படம் நடக்கிறது.
கேமரூன் மீது நம்பிக்கை: அரை மணி நேரத்திலேயே ஒரு மாதிரி ஆகிவிட்டது. மூன்று மணி நேரம் அமர்ந்து இந்தப் படத்தை பார்க்க வேண்டுமா என்று இருந்தது. ஆனாலும் கேமரூன் மீது வைத்த நம்பிக்கையில் அமர்ந்து பார்த்தால்; கதையில் டர்னோ ட்விஸ்ட்டோ இல்லை. படத்தில் நேரடியாக ஒரு வில்லனே இல்லை. நெருப்பு என்று சொல்லி ஒரு ஆயா வந்து செய்த வித்தையெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. எமோஷனலாக கதை சொல்கிறேன் என்கிற பெயரில் ஓயாமல் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். அதெல்லாம் கனெக்ட்டும் ஆகவில்லை.
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு: நீளம் நீளமாக சண்டை காட்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறார்கள்தான். ஆனால் அதெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரிதான் இருக்கிறது. இதற்கு முந்தைய பாகங்களில் வந்த கேரக்டர்கள் எல்லாம் இதிலும் வருகிறார்கள். யார் என்ன என்று தெரிந்துகொள்வதற்குள் அந்த சீனே முடிந்துபோகிறது. இரண்டு பாகங்களைவிடவும் இதில் டெக்னிக்கலாக நன்றாக இருந்தது. இதில் நெருப்புக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
முதல் மற்றும் இரண்டாவது பாகங்களை பார்க்காமல் இதை பார்ப்பவர்கள் விஷுவல் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். அவைகளை பார்த்தவர்கள் இதை பார்த்தால் ஏற்கனவே இந்த விஷுவலை பார்த்துவிட்டோமே; கதை இல்லையே என்று சொல்வார்கள். மூன்றாவது பாகம் வியாபாரத்தில் வெற்றியடையாவிட்டால் நான்காவது பாகத்தை எடுக்கமாட்டேன் என்று கேமரூன் சொல்லியிருக்கிறார். அதுவும் சரிதான். இந்த சப்ஜெக்ட்டையே மூட்டை கட்டிவிட்டு டெர்மினேட்டர் மாதிரியான படங்களை எடுக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











