ரஜினியே கேட்டும் கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?
மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். நடிப்பதிலும் அந்தப் படத்தின் தொழில் நுட்பம் குறித்த விஷயங்களிலும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு, ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவில்லையாம்.
அது, இந்தப் படத்தை சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பது!
காரணம் சுல்தானில் சௌந்தர்யா அண்ட் கோ செய்த குழப்படி & குளறுபடியால், தேவையின்றி நீதிமன்ற வழக்கு, பத்திரிகைகளில் தாறுமாறான செய்திகள் என ரஜினிக்கு மனவருத்தம் அடையும் நிலையை ஏற்படுத்தின. கோவா தயாரிப்பிலும் சௌந்தர்யா கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!
அதனால் 'கோச்சடையான்' படத்தினை எப்படியாவது கைமாற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்.
இதில் ஒரு முயற்சியாக தனக்கு நெருக்கமான ஏவிஎம் சரவணனிடம் தனிப்பட்ட முறையில் கோச்சடையான் பற்றிப் பேசியுள்ளார் ரஜினி.
கேரளா ஷூட்டிங்குக்கு கிளம்பும் முன் சரவணனைச் சந்தித்த ரஜினி, கோச்சடையான் படத்தயாரிப்பை அப்படியே கை மாற்றிவிட விரும்புவதாகக் கூறினாராம்.
ஆனால் சரவணன் சினிமா தயாரிக்கும் அல்லது வேறு படத்தை வாங்கி விநியோகம் பண்ணும் நிலையில் இல்லை. "சினிமா நிலவரம் சரியில்லை ரஜினி. அதனால் சினிமா தயாரிக்கும் மனநிலையில நாங்கள் இல்லை. நீங்களே வலியவந்து கேட்டும் என்னால் செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஸாரி" என்றாராம் சரவணன்.
இதே பயத்தில்தான் அயன் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்று, பின் வருத்தப்பட்டார்கள் ஏவிஎம்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் சினிமா என்ற குதிரை யாரை குப்புறத்தள்ளுமோ என்ற பயம்தான்!


Click it and Unblock the Notifications











