அப்பா சொல்லை தட்டாத மகன் AVM சரவணன்.. கடைசி வரைக்கும் அதை கைவிடாமல் செஞ்சுட்டு வந்திருக்காரு
சென்னை: தென்னிந்திய திரையுலகை மொத்தமாக கவலையில் ஆழ்த்தியுள்ளது AVM சரவணன் அவர்களின் மறைவு. நேற்று அதாவது டிசம்பர் 3ஆம் தேதி தான் தனது 86வது பிறந்த நாளைக் கொண்டாடி உள்ளார். இப்படி இருக்கும்போது இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி அவர் மறைந்தது, பலருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது. அவரது தந்தை AV மெய்யப்பன் செட்டியார் அவரது கடைசி காலத்தில் சொல்லிவிட்டு சென்ற விஷயத்தை கடைசி வரை பின் பற்றி உள்ளார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் பழமையான திரைப்பட ஸ்டூடியோக்களில் ஒன்று சென்னையில் உள்ள AVM ஸ்டுடியோ. இந்தியா ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாகவே இந்த ஸ்டூடியோ 1945ஆம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் இருந்து பலரும் வந்து படம் எடுத்துச் சென்ற ஸ்டுடியோ என்றால் அது AVM ஸ்டூடியோ தான். பல ஹிந்தி படங்களும் கூட இங்கு படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் படங்களை தயாரிக்கவும் AVM முடிவு செய்து படங்களை தயாரித்தது. இவர்கள் பேனரில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்களுக்கு படத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும். இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிற, இருந்த பல நட்சத்திரங்களுக்கு பல வழிகளை உருவாக்கி கொடுத்தவர் AV மெய்யப்பன் செட்டியார். தமிழ் திரையுலகில் AV மெய்யப்பன் செட்டியார் பலருக்கும் உறுதுணையாக இருந்துள்ளார். அவர்கள் காலத்தில் இருந்த அன்பும் பிணக்கும் இன்றைக்கு திரைத்துறையில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதாக கூட பலரும் கூறுகிறார்கள்.

கடைசி ஆசை: இப்படி இருக்கும்போது, AV மெய்யப்பன் செட்டியார் கடந்த 1979 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னவென்றால், AVM நிறுவனம் படம் தயாரிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் ஸ்டூடியோவை கடைசி வரை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இது எனது 50 ஆண்டு கால உழைப்பின் சின்னம். எனவே படங்கள் தயாரிக்க முடியாவிட்டால், ஸ்டூடியோவை இயக்குங்கள் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை: தனது தந்தையின் கடைசி ஆசையை AVM சரவணன் தனது கடைசி காலம் வரை நிறைவேற்றி வந்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள AVM ஸ்டூடியோவில் மிகவும் குறைந்த விலையில் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. பல திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்திய போது கூட, AVM திரையரங்கில் டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடபழனி ஸ்டுடியோ வாசலில் இருந்த AVM-இன் சுற்றும் பூமி திரைப்படத்தின் மீது தீராத தாகம் கொண்டவர்களுக்கு அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இப்படியான பல புகழுக்குச் சொந்தமான, AVM குழுமத்தின் AVM சரவணன் அவர்களின் மறைவு மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











