ஏவிஎம் சரவணன் உயிரிழந்தார்.. நேற்று பிறந்தநாள்.. இன்று இப்படியொரு சோகம்.. திரையுலகில் உச்சக்கட்ட அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அந்த நிறுவனத்தை பொறுப்பு எடுத்து நடத்திவந்த சரவணன் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இந்நிலையில் 86 வயதாகும் அவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையில் உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டில் எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன, இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கெல்லாம் தலையாயது என்றால் ஏவிஎம் நிறுவனம்தான். ஏ.வி மெய்யப்ப செட்டியாரால் கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் ஏகப்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.
பொறுப்புக்கு வந்த சரவணன்: சிவாஜி, எம்ஜிஆர் மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல ஹீரோக்கள் அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடித்திருக்கிறார்கள். எப்படியாவது ஏவிஎம் நிறுவனத்தின் பேனரில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான் நடிகரின் அதிகபட்ச கனவாக இருக்கும். மெய்யப்ப செட்டியார் மறைந்த பிறகு அவரது மகன் சரவணன் அந்த நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்தார்.

தொடர் ஹிட்டுகள்: தந்தை இருக்கும்போது எப்படி ஏவிஎம் நிறுவனம் வெற்றிகரமாக இருந்ததோ அதேபோல் தன்னுடைய பொறுப்பின் கீழும் இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தவர் சரவணன். அதன் பலனாக ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து கொள்ளை லாபம் பார்த்தது ஏவிஎம் நிறுவனம். பல ஊழியர்கள் அந்த நிறுவனத்தை நம்பி வேலை பார்த்தார்கள், பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமை, அமைதி: பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏவிஎம் சரவணன் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். பெரிய சாம்ராஜ்ஜியமே அவரது கைகளில் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் விழாக்களுக்கு அவர் வருவதை பார்க்கும்போது ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆச்சரியம்தான்படுவார்கள். ரஜினி முதல் அத்தனை நடிகர்களும் மெய்யப்ப செட்டியார் மீது வைத்திருந்த அதே மரியாதையையும், அன்பையும் இவர் மீதும் வைத்திருந்தார்கள்.
உயிரிழந்த சரவணன்: அவருக்கு வயது 86 ஆகும். பெரிய அளவில் அந்த நிறுவனம் இப்போது தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதில்லை. சூழல் இப்படி இருக்க வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டாதாக தெரிகிறது. ஆனால் அவர் இன்று உயிரிழந்தார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் வைக்கப்பட்டிருக்கிறது. மாலை 3.30 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது உயிரிழப்பு திரைத்துறையை பெருத்த சோகத்தில் தள்ளியுள்ளது. இவர் ஏவிஎம் ஸ்டூடியோவின் கதை இலாகா பணியிலும் பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி சென்னை மாநகர் ஷெரீப் என்ற பதவியை கடந்த 1986ஆம் ஆண்டு வகித்த அவர்; நேற்றுதான் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











