ஏவிஎம் சரவணனின் நானும் சினிமாவும்... ஒரு இனிய நெடிய நினைவலைகளின் தொகுப்பு!
ஏவிஎம் சரவணன்... தமிழ் சினிமாவின் நிகரற்ற சாதனையாளர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமிருக்காது. தமிழ் சினிமாவில் பல புதிய விஷயங்களை ஒரு தயாரிப்பாளராக அவர் செய்து காட்டினார்.
வணிகப் படங்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? ஒரு படத்தை குடும்பத்தினருடன் பார்க்கும்படி உருவாக்குவது எப்படி என்பதெல்லாம் ஏவிஎம் சரவணனிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அமரர் ஏவி மெய்யப்பன் - இராஜேஸ்வரி மகனாகப் 3-12-1939ல் பிறந்த ஏவிஎம் சரவணன், தன்னுடைய 18வது வயதில் 9-4-58 ம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018-ல் திரையுலகில் அவருக்கு 60 ஆண்டுகள் நிறைவடைந்தது. திரைத்துறையில் மணி விழா காணுகிறார்.
ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது என அனைத்து துறைகளிலும் பணியாற்றிவர் சரவணன். 'மாமியார் மெச்சிய மருமகள்' (1958) முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும், 125 படங்கள் தயாரிக்கத் துணை நின்றார்.
சென்னை மாநகர ஷெரிப்பாகவும் 2 வருடங்கள் பதவி வகித்தார். இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் (FPAI), அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராகவும் (FIAAP) பதவி வகித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது, ராஜா சாண்டோ விருது, சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
முயற்சி திருவினையாக்கும், மனதில் நிற்கும் மனிதர்கள் (4 பாகங்கள்), ஏவிஎம் 60 சினிமா ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். இப்படி பல அனுபவங்கள் பெற்றுள்ள ஏவிஎம் சரவணன், தினந்தந்தி நாளிதழில் 'நானும் சினிமாவும்' என்ற தலைப்பில் தொடர் எழுதினார். மிக நெடிய, அதே நேரம் தமிழ் சினிமாவின் பல சாதனைக் கலைஞர்களுடனான தன் அனுபவங்களை அதில் சொல்லியிருந்தார் சரவணன்.
அத்தொடரை தொகுத்து தினத்தந்தி பதிப்பகம் 'நானும் சினிமாவும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூலை ஏவிஎம் சரவணன் திரைத்துறைக்கு வந்து 60ஆம் ஆண்டில் நடிகர் சிவகுமார் வெளியிட, நல்லி குப்புசாமி செட்டி பெற்றுக் கொண்டார்.
கவிஞர் வைரமுத்து, வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, இயக்குநர் எஸ்பி முத்துராமன், டைட்டன் ரகு, பத்திரிகையாளர் நடராஜன், டாக்டர் மயிலப்பன், ராஜா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். இவர்களுடன் ஏவிஎம் சரவணன் குடும்பத்தார் லட்சுமி சரவணன், நித்யா குகன், உஷா சரவணன், சித்தார்த், ஹரினி சித்தார்த் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். ஏவிஎம் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் பங்கு பெற்றார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன், பிஆர்ஓ பெருதுளசி பழனிவேல் ஆகியோர் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











