சமூக மாற்றத்தை அழகாக படம் பிடிக்கும் 'மெட்ராஸ்'... விருது தந்து கெளரவிக்கும் 'மதுரை'!
சென்னை: கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்' திரைப்படத்திற்கு ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு' விருதை வழங்குகிறது எவிடென்ஸ் அமைப்பு.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி வரும் எவிடென்ஸ் அமைப்பு மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இது தவிர ஆண்டுதோறும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து பணியாற்றும் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு' விருது ‘மெட்ராஸ்' படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா இம்மாதம் 25ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ‘தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை...
‘மெட்ராஸ்' படத்தில் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயக்குநர் ரஞ்சித் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்.

அரசியல் கட்சிகளின் சுயநலம்...
அப்பாவி இளைஞர்களை தங்களது சுயநலத்துக்காக அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பதை இப்படத்தில் இயக்குநர் அழகாக சொல்லியிருக்கிறார்.

சேரி வாழ்க்கை...
சுகவாசிகளின் நகரமாக சித்தரிக்கப்படும் சென்னையில் சேரிகளும் இருக்கின்றன என்பதை ஒப்பனைக் கலப்பில்லாமல் படம் பிடித்திருக்கிறார்.

இயல்பான பதற்றம்...
ஒரு இளைஞன் அரசியலுக்கு போவதால் அவனது மனைவி, மக்களுக்கு ஏற்படும் இயல்பான பதற்றத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

அரசியல் ஆதிக்கம்...
மொத்தத்தில் அரசியலும் ஆதிக்கமும் இந்தச் சமுதாயத்தை எப்படிக் கூறுபோடுகிறது என்பதை யும், நாம் அதில் சிக்கிக் கொள்ளா மல் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் அழகாகச் சொல்லி இருக்கிறார்.

அங்கீகாரம்...
இந்தப் படம் எங்களின் பிரச்சாரத்துக்கும் ஒரு கருவியாக இருப்பதால் சமூக ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் இதை அங்கீகரிக்கிறோம். இதற்காக மதுரையில் நடக்கும் விழாவில் ‘மெட்ராஸ்' படத்துக்கு ‘சமூக மாற்றத்துக்கான படைப்பு விருது' வழங்குகிறோம். விருதுடன் சேர்ந்து ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











