'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு
சென்னை : முழு நீள திரைப்படத்தில் சொல்லவிரும்பும் கருத்துகளைச் சில நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தின் வழியாகவே சொல்லிவிட முடியும். இன்றைய அவசர யுகத்தில் முழு நீள திரைப்படங்களை மட்டுமல்ல குறும்படங்களை ரசிக்க வைக்கவும், ரசிகர்களை என்கேஜ் செய்யும் விஷயங்கள் இருக்கவேண்டும்.
குறும்படங்களின் வழியாக பல நம்பிக்கைக்குரிய இளம் படைப்பாளிகள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி வருகிறார்கள். பெரிய பட்ஜெட் இன்றி சிறந்த கதையமைப்பின் மூலம் ரசிகர்களைக் கவரும் ஒரு கலை வடிவமான குறும்படத்தை ஆதாரமாக வைத்து சினிமாவில் வாய்ப்புத் தேடி வருகிறார் சீனிவாசன் செந்தில்முத்து.

என்ஜினியரிங் முடித்து, சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். படித்தது கணினிப் பொறியியலாக இருந்தாலும் கலை ஆர்வத்தால் நடிகராகவும், இயக்குநராகவும் குறும்படங்களில் கலக்கி வருகிறார்.
விவசாயத்தை அடிப்படையாக வைத்து இயக்கி நடித்த 'முதுகெலும்பு' குறும்படம் US - FETNA உள்ளிட்ட 9 விருதுகளைப் பெற்றுள்ளது. இவர் இயக்கிய 'தூபா' திரைப்படம் இதுவரை 3 விருதுகளைப் பெற்றுள்ளது. அதில் நார்வே குறும்பட விருதும் ஒன்று. 'If lives', 'Sorry ji' ஆகிய குறும்படங்களையும் இயக்கி நடித்திருக்கிறார். நல்ல கதையோடு கூடிய சிறந்த படங்களை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அவரிடம் பேசியதில், "நண்பர்கள் இயக்கிய இரண்டு மூன்று படங்களில் நடித்தேன். பிறகு, நாமே படம் எடுக்கலாமே என ஆரம்பித்ததுதான் இயக்கம். இயக்கிய முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் சிரிப்பு வரும் அளவுக்கு அமெச்சூராக இருக்கும். படத்தைப் பார்த்தவர்கள் சொல்லும் குறைகளைக் கேட்டுக்கொண்டு அதன்பிறகுதான் சினிமா பற்றிய தொழில்நுட்பங்களை தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

பிறகு 'புதுயுகம்' தொலைக்காட்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். ஒரு சில படங்களில் சில யூனிட்டுகளுக்கு மட்டும் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். அதன்பிறகு, இன்டிபென்டட் ஃபிலிம் மேக்கராக நல்ல கதையோடு குறும்படங்கள் இயக்கத் தொடங்கினேன்.
'முதுகெலும்பு' திரைப்படம் கருத்து சொல்லும் விதமாக இருக்கும். குறும்படம் என்றாலே மெசேஜ் சொல்லவேண்டும் என இல்லாமல் யதார்த்தமான கதையை ஒருவருடைய வாழ்வியலைச் சொல்லும் விதமாக 'தூபா' குறும்படம் எடுத்தோம்.
சினிமா இயக்குவதற்காக பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு வெப் சீரிஸ்க்கான ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறோம். வெப் சீரிஸ் கிடைத்தாலும் செய்யலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறோம். நல்ல தயாரிப்பு நிறுவனமும், வெளியிடும் தளமும் அமைந்தால் விரைவில் தொடங்கிவிடலாம். கூத்துப்பட்டறை நடிகர்களான என் நண்பர்கள், சில படங்களில் வேலை பார்த்த தொழிலுட்பக் கலைஞர்கள் எங்கள் டீமில் இருக்கிறார்கள்.

குறும்படங்கள் யார் வேண்டுமென்றாலும் எளிதாக எடுக்கலாம் எனும் நிலை வந்துவிட்டது. அதனால், நிறையப் படங்கள் வருகின்றன. மாதத்திற்கு நான்கு விருது விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கே விருது வாங்குவது பெரிய விஷயம் இல்லை. அங்கீகாரம் பெற்ற, நீண்ட காலம் துறையில் அனுபவம் உள்ளவர்களால் வழங்கப்படும் விழாக்களில் விருதுபெற வேண்டும். அப்போதுதான் நமக்கும் நம் மீதே நம்பிக்கை ஏற்படும். நான் பெரிதாக நினைப்பது கதையும், திரைக்கதையும் தான். டெக்னிக்கலாக எத்தனை விஷயங்கள் சிறப்பாக இருந்தாலும் கதை இருந்தால் தான் படம் கவனிக்கப்படும்." எனப் பேசினார் எதிர்கால திரைப்பட இயக்குநர் சீனிவாசன் செந்தில்முத்து.


Click it and Unblock the Notifications











