Ayalaan Box Office - வசூலில் அசரடித்த அயலான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
சென்னை: இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரவிக்குமார். அவர் சில வருடங்களுக்கு முன்பே சிவகார்த்திகேயனை வைத்து அயலான் திரைப்படத்தை இயக்கினார். சில காரணங்களால் நீண்ட தாமதத்துக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களின் மூலம் அடுத்தடுத்து 100 கோடி கிளப்பில் இணைந்தார். அதனையடுத்து அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.

மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கேற்றபடி மாவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய அவர், இந்த முறை மிஸ் ஆகாது என்று பேசியிருந்தார். அதேபோல் படமும் ஹிட்டானது.
அயலான்: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார் சிவகார்த்திகேயன். ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை ஒன்லைனாக கொண்டு படம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு படத்தின் ஷூட்டிங்கும் முடிந்தது. ஆனால் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதற்கு காரணம் கிராபிக்ஸ் பணிகள் என்று கூறப்பட்டாலும்; பண பிரச்னைதான் பிரதான காரணம் என்று திரைத்துறையில் பேச்சு ஓடியது.
அயலான் ரிலீஸ்: இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷுக்கு போட்டியாக இந்த பொங்கல் பண்டிகையில் களத்தில் குதித்தார் சிவகார்த்திகேயன். எனவே இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி?: ஏலியன் ஜானரில் படம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக குழந்தைகளை கவர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எஸ்கே ரசிகர்களிடையே இருந்தது. அந்த ஆவலோடு படத்துக்கு சென்ற ரசிகர்கள் படத்துக்கு டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். அதிலும் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெய் சிலிர்க்க வைப்பதாகவும்; கதை சாதாரண கதைதான் என்றாலும் ஏலியனையும், தன்னுடைய ஸ்க்ரீன் பிளேவையும் வைத்து ரவிக்குமார் காப்பாற்றிவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறினர்.
75 கோடி வசூல்: படம் வெளியாகி விமர்சன ரீதியாக ஒருபக்கம் நல்ல வரவேற்பை பெற்ற சூழலில் வசூல் ரீதியாகவும் அருமையான ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. படம் ரிலீஸான முதல் நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி அயலான் 75 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படமும் 80 கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











