மீண்டும் தொடங்கிய அயலான்… ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன்… இதுதான் ரிலீஸ் தேதியா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018ம் ஆண்டு தொடங்கிய 'அயலான்' திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக அயலான் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே போனது.
இந்நிலையில், தற்போது அயலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சிவகார்த்திகேயன் அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சயின்ஸ் பிக்சனில் அயலான்
2015ல் ரிலீஸான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். விஷ்ணு விஷால், கருணாகரன் நடித்த இந்தப் படம் டைம் டிராவல் பின்னணியில் அட்டகாசமான திரைக்கதையோடு உருவாகியிருந்தது. ரசிகர்களிடமும் சினிமா விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் மூலம், சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைத்தார் ராஜ்குமார். சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் கூட்டணியில் 'அயலான்' என்ற டைட்டிலில் 2018ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி வந்தது.

பாதியில் நின்ற அயலான்
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆனார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்தது. சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் என சொல்லப்பட்ட அயலான், பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நின்று போனது. அதன்பின்னர் கேஜிஆர் நிறுவனம் அயலான் படத்தை கைப்பற்றியதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மான் இசையில், அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி நல்ல ரீச் ஆனது.

விளக்கம் சொன்ன சிவகார்த்திகேயன்
அயலான் படம் ட்ராப் ஆனதால், அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன், அயலான் கிராபிக்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதனால், படம் கண்டிப்பாக அடுத்தாண்டு வெளியாகிவிடும் எனக் கூறியிருந்தார். அதன்படி, தற்போது அயலான் படத்தை அடுத்தாண்டு, சம்மரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏப்ரல் அல்லது மே மாதம் அயலான் ரிலீஸாகிவிடும் எனக் கூறப்படுகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன்
இந்நிலையில், அயலான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனும் இயக்குநர் ரவிக்குமாரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அயலான் படத்தின் சில பேட்ஜ் ஒர்க் காட்சிகளில் மட்டும் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அயலான் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டது வைரலாகி வருகிறது. ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

முதல் ஏலியன்ஸ் திரைப்படம்
அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழில் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக அயலான் இருக்கும் என சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அயலான் இத்தனை நாட்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸுக்கு தயாராகி வருவது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











