Ayalan: அடுத்தப்படமும் சிவகார்த்திகேயனுடன்தான்.. மாஸ் ஸ்கிரிப்ட்டுடன் காத்திருக்கும் அயலான் இயக்குநர்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகிபாபு, சரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் இயல்பான நடிப்பு இந்தப் படத்திற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
எஸ்கே 21 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது எஸ்கே 21 படம். இந்தப் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. தற்போது சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அயலான் படம்: முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது அயலான் படம். இந்தப் படத்தின் சிஜி வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் இணையும் அயலான் கூட்டணி: இதனிடையே தன்னுடைய அடுத்தப்படமும் சிவகார்த்திகேயனுடன்தான் என்று அயலான் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அயலான் படத்தின் தாமதத்தையடுத்து அந்தப் படத்தின் இடையிலேயே சிவகார்த்திகேயனுடனான படத்தை இயக்க தான் திட்டமிட்டதாகவும் ஆனால் படத்தின் ரிலீசை தொடர்ந்து அடுத்தப்படத்தை இயக்க தற்போது முடிவெடுத்துள்ளதாகவும் ரவிக்குமார் மேலும் கூறியுள்ளார்.

ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசி: இந்தப் படத்திற்காக பல ஸ்கிரிப்ட்களை தான் சிவகார்த்திகேயனுடன் விவாதித்ததாகவும் அதில் ஒரு ஸ்கிரிப்டை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். அயலான் படத்தின் வெற்றி, தங்களின் அடுத்த படத்தின் வேலைகளை மேலும் துரிதப்படுத்தும் என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார். அயலான் படத்தில் ஏலியனை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ள நிலையில் இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











